பாபநாசம் அகஸ்தியர் அருவி, உடுமலை பஞ்சலிங்க அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டம் பாபநாசம், அகஸ்த்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, உடுமலைப்பேட்டை பஞ்சலிங்க அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருநெல்வேலி: பாபநாசம் அகஸ்த்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, உடுமலைப்பேட்டை பஞ்சலிங்க அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடுமுண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்தில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவி ஆகியவை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் குற்றால அருவிகள் திறக்கப்பட்டது போல் இங்குள்ள அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிக்கு அனுமதி வழங்க கோரி சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர் .

இதனைத் தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளை அனுமதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் ஆலோசனை மற்றும் கள ஆய்வு மேற்கொண்டு சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க முடிவு செய்து இன்று 22.12.2021 முதல் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீரின் அளவினைப் பொருத்தும், சுற்றுலா பயணிகள் நலன் கருத்தில் கொண்டு குளிக்க அனுமதிக்கப்படும். அருவிகளுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் சோதனைச்சாவடிகள் வழியாக காலை சுமார் 8 மணிமுதல் மதியம் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். சுற்றுலா பயணிகள் அனைவரும் வன விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின் இன்று அருவிகள் திறக்கப்பட்டுள்ளது சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலையில் குளிக்க அனுமதி
உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது சிற்றாறுகளில் நீர்வரத்து ஏற்பட்டு பஞ்சலிங்க அருவிக்கு வந்து சேர்கிறது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு குருமலை, குழிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் உற்பத்தியாகின்ற பல்வேறு சிற்றாறுகள் நீராதாரமாக உள்ளது.
அடர்ந்த வனப்பகுதியின் வழியாக சிற்றாறுகள் மூலம் நீர்வரத்து உள்ளதால் பல்வேறு மூலிகைகள் தண்ணீர் கலந்து அருவியில் விழும் தண்ணீரில் குளிப்பதால் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைகிறது. இதனால் அருவியில் குளிக்க பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் உற்சாகமாக குளித்தனர்.












Click it and Unblock the Notifications