பேசும் போது மைக்கை தட்டிவிட்ட திமுக எம்.எல்.ஏ. உதவியாளர்! அமைச்சர் நாசருக்கு வந்தது பாருங்க கோபம்!
திருவள்ளூர்: திருத்தணி திமுக எம்.எல்.ஏ. உதவியாளர் மீது அமைச்சர் நாசர் ஆத்திரத்தில் ஒரு குத்து விட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசிக்கொண்டிருந்த போது, திமுக எம்.எல்.ஏ.வின் உதவியாளர் மைக்கை தெரியாமல் தட்டிவிட்டதால் அமைச்சருக்கு கோபம் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுவிடங்களில் அமைச்சர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும், பேச வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பலமுறை அறிவுறுத்தியும் பலரும் அதை கேட்டதாக தெரியவில்லை.
ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு இல்லை..உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்புகின்றனர் - அமைச்சர் நாசர்
பொது உறுப்பினர்கள்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் நாசர், கட்சிக்காரர்கள் மத்தியில் மிகவும் ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தார். தமிழ் மொழி குறித்து அவர் பேசிக்கொண்டிருக்கும் போது அவரது பின்னால் சென்ற திருத்தணி திமுக எம்.எல்.ஏ.சந்திரனின் உதவியாளர் சதீஷ், மைக் வயரை தெரியாமல் காலில் மிதித்துவிட்டார். இதனால் போடியத்தில் இருந்த மைக் கீழே விழுந்தது.
அமைச்சர் கோபம்
இதனால் எரிச்சலடைந்த அமைச்சர் நாசர், தனது பேச்சுக்கு இடையூறு செய்யும் வண்ணம் நடந்துகொண்ட திமுக எம்.எல்.ஏ.வின் உதவியாளரை ஓங்கி ஒரு குத்து விட்டார். இதனைக் கண்ட மேடையில் இருந்த நிர்வாகிகள் பதறிப்போனார்கள். அமைச்சர் ஏன் டென்ஷன் ஆனார் எனத் தெரியாமல் மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த திமுகவினர் குழம்பிப் போனார்கள். இதையடுத்து மீண்டும் மைக் சரி செய்யப்பட்ட பிறகு தனது பேச்சைத் தொடர்ந்தார் அமைச்சர் நாசர்.
முதல்வர் அறிவுரை
பொதுவிடங்களில் அமைச்சர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்த்து தர்ம சங்கடமான சூழலை உருவாக்க வேண்டாம் எனவும் அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் தான் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருந்தார். ஆனாலும் அதனை பெரும்பாலான அமைச்சர்கள், நிர்வாகிகள் ஏற்று செயல்படவில்லை என்பது இது போன்ற நிகழ்வுகளின் மூலம் வெளிச்சத்துக்கு வருகிறது.
மேடைக்கு கீழே
அமைச்சர் நாசரின் கோபத்துக்கு ஆளான சதீஷ் உடனடியாக மேடையிலிருந்து கீழே இறங்கி சென்றுவிட்டார். அமைச்சர் நாசர் கோபப்பட்டு தாக்கிய விவகாரத்தை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.