அண்ணாமலையார் கோயிலில் சிசிடிவி கேமரா பொருத்த துவாரபாலகர் சிலையின் முகத்தில் துளை! பக்தர்கள் வேதனை
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலையின் முகத்தில் துளையிட்டு சிசிடிவி பொருத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் 6 ஆம்தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கார்த்திகை தீப திருவிழாவிற்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வருகையால் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அண்ணாமலையார் கோவில், கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களே, அண்ணாமலையார் கோவிலை காத்தது யார்.. ஸ்டாலின் கேள்வி!
அண்ணாமலையார் கோயில்
குறிப்பாக அண்ணாமலையார் கோவில் திருமஞ்சன கோபுரம் அருகில் உள்ள துவாரபாலகர் சிலையின் முகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். கோபுரத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் துவார பாலகர் சிலையின் முகத்தில் தொலையிட்டு கண்காணிப்பு கேமராவை பொருத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பரவியதால் கண்காணிப்பு கேமரா பொருத்தும் ஊழியர்கள் உடனடியாக துவாரபாலகர் முகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை அகற்றி சிலையின் அருகில் மாற்றி பொருத்தியுள்ளனர். பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் பாரம்பரியமாக பாதுகாக்கப்பட வேண்டும்.
பாரம்பரியம்
இது போன்று தவறுகள் செய்தால் கோவில் பாரம்பரியம் முழுவதுமாக பாதிக்கப்படுவதுடன் சிலைகளின் அமைப்பும் பாழாகிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தனர். துவார பாலகர்கள் என்பவர்கள் கோயில் வாயில்களின் இரு புறங்களிலும் அமைக்கப்படும் காப்போர் சிலைகளாகும். பொதுவாக இவர்கள் போர் வீரர்களை போல் தோற்றம் கொண்டவராக இருப்பர்.
ஆண், பெண் பாலரும்
ஆண், பெண் இருபாலரும் துவாரபாலகர்களாக இருப்பர். துவாரபாலகர்களைக் குறிக்கும் சிற்பங்கள், இந்து, பௌத்த சமயங்கள் பரவியிருந்த தென்னாசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல நாடுகளிலும் காணப்படுகின்றன. இந்துக் கட்டடக் கலையிலும், பௌத்த கட்டடக் கலையிலும் துவாரபாலகர்களின் சிற்பங்கள் முக்கியமான கூறுகளாகக் காணப்படுகின்றன.
துவார என்றால் என்ன?
துவார என்பது வாயில் என்றும் பால என்பது காப்போன் என்றும் பொருள்படும். துவாரபாலகர்களின் படிமங்கள் திருக்கோயில்களின் கோபுர நுழைவாயிலிலும், கருவறை நுழைவாயிலிலும் அமைக்கப்பட்டிருக்கும் காவல் தெய்வங்கள் ஆகும். இவர்கள் தெய்வங்களை பாதுகாப்பவர்கள் என்பதும் ஒரு ஐதீகம் உள்ளது.