நொந்துபோன எ.வ.வேலு.. கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. திருவண்ணாமலை மொத்த பிளானே மாறுதாம்..!
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், சிலையை உடனடியாக அமைக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலு பொறுப்பேற்று இந்தச் சிலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். அதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து வருகிறாராம்.
முதல்வர் ஸ்டாலின் இந்த மாதம் திருவண்ணாமலைக்கு வருவதாக இருந்தது. ஆனால், தற்போது கருணாநிதி சிலை அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதால் அவரது வருகையையே தள்ளிப்போடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

கருணாநிதிக்கு சிலை
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு திருவண்ணாமலையில் சிலை அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திருவண்ணமலையில் கிரிவலப் பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைப்பதை எதிர்த்து, கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கி, அருகில் உள்ள பொது நிலத்தையும் ஆக்கிரமித்து சிலை அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முறைகேடாக பட்டா
மேலும், கிரிவல பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர் எனவும், அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால், அங்கு கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் நிர்வகிக்கும் ஜீவா கல்வி அறக்கட்டளைக்கு விற்கப்பட்டு, 215 சதுர அடி என பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், வருவாய் துறையினர், அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் குமரன் ஆகியோர் கூட்டு சேர்ந்து முறைகேடாக பட்டா வாங்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கார்த்திக் குற்றம்சாட்டியிருந்தார்.

காழ்ப்புணர்ச்சி
இந்த வழக்கில் எ.வ.வேலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜேந்திரன் என்பவரிடமிருந்து வாங்கிய நிலத்திற்கு பட்டா உள்ளது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிறரின் தூண்டுதலின் பேரில் தொடரப்பட்ட வழக்கு என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். அரசு தரப்பில், இது தனியார் சொத்து என்றும், அதில் சிலை நிறுவப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தும், வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் அறிக்கை தாக்கல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது. இந்த இடைக்கால தடையை நீக்க கோரி ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

தீர்ப்பு ஒத்திவைப்பு
அப்போது மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் எனக் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பிரதான வழக்கு மற்றும் தடை நீக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். தீர்ப்பு வழங்கப்படும் வரை குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க முடியாது என்பதால் திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இடத்தை மாற்ற
இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வராவிட்டால் என்ன செய்வது என யோசித்த அமைச்சர் எ.வ.வேலு தரப்பினர் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்டிருந்த சிலைக்கான பீடத்தையும் இரவோடு இரவாக அகற்றினர். அந்த இடத்துக்குச் சற்று தள்ளி இருக்கும் தனியார் கட்டடத்தின் ஒரு பகுதியை எப்படியாவது விலைக்கு வாங்கி, அங்கேயாவது சிலையை அமைத்துவிட வேண்டும் என்ற முயற்சிகளில் இறங்கியுள்ளனர். காரணம், இந்த மாதம் திருவண்ணாமலைக்கு வரும் ஸ்டாலினை வைத்து கருணாநிதி சிலையை திறப்பதாக திட்டம் இருந்தது.

முதல் சிலையே
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் கருணாநிதி சிலையை அமைக்கும் பணியையே மேற்பார்வை செய்தவர் அமைச்சர் எ.வ.வேலு தான். முன்னின்று அமைத்தவர் எ.வ.வேலுவின் ஆதரவாளரான சி.என்.அண்ணாதுரை. கருணாநிதி சிலையை அமைத்த அவருக்குத்தான் எம்.பி தேர்தலில் திருவண்ணாமலையில் போட்டியிட சீட் வாங்கிக் கொடுத்தார் எ.வ.வேலு. அந்தச் சிலைக்குப் பிறகுதான் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கருணாநிதிக்கு சிலைகள் அமைக்கப்பட்டன.

கௌரவ பிரச்சனை
இந்நிலையில், தனது கோட்டையான திருவண்ணாமலையில் கருணாநிதிக்கு சிலை அமைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் நொந்து போயிருக்கிறார் எ.வ.வேலு. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த மாதம் திருவண்ணாமலைக்கு நீங்கள் வருவதற்குள் சிலை தயாராக இருக்கும் என முதல்வரிடமும் உறுதியளித்தாராம் எ.வ.வேலு. இந்த விஷயத்தால் முதல்வர் ஸ்டாலின் கடும் அப்செட் ஆகியிருந்தாலும், அடாவடியாக எதுவும் நடந்து பிரச்சனையைக் கிளப்பிவிட வேண்டாம் எனக் கூறி அமைச்சரை சமாதானப்படுத்தி இருக்கிறார்.

பிளானை மாற்றிய முதல்வர்
இந்நிலையில் முதல்வரின் திருவண்ணாமலை வருகையும் மாற்றப்படும் எனக் கூறப்படுகிறது. திருவண்ணாமலைக்கு வருகிற 22-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருவதாக இருந்தது. திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைப்பதில் எழுந்துள்ள பிரச்சனை காரணமாக அவரது பயணத்திட்டமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் 21-ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர் நிகழ்ச்சியை முடித்து விட்டு சென்னை செல்வார் எனக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை செல்லும் திட்டம் ஒரு வாரம் கூட தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications