"திமுகவின் விருப்பம் இதுதான்" சட்டமன்ற இருக்கை விவகாரம் குறித்து ஒரே போடாக போட்ட நாஞ்சில் சம்பத்!
திருவாரூர்: அதிமுக ஒன்றுபட திமுக விரும்பியதால் தான் சட்டமன்றத்தில் ஒபிஎஸ் - இபிஎஸ் இருவருக்கும் அருகருகே இருக்கை வழங்கப்பட்டதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என்று இரு தரப்பும் முட்டி மோதி வரும் நிலையில், சட்டமன்றம் கூடியது.
இதனால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதில் சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விதிகளின் படி இல்லை என்று அறிவித்தார். இதனால் ஓபிஎஸ் - இபிஎஸ் அருகருகே அமரும் நிலை உருவாகியது.
தமிழகம் சங்கிகளின் பூமி.. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நிச்சயம் நடத்தப்படும்.. அர்ஜூன் சம்பத் ஆவேசம்!
ஓபிஎஸ் தீவிரம்
ஆனால் சட்டசபையில் ஓபிஎஸ் அருகில் அமர்வதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. இதன் காரணமாக சட்டமன்றக் கூட்டத்தை இபிஎஸ் புறக்கணித்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே ஓபிஎஸ்-க்கு டெல்லி மேலிடத்தின் ஆதரவு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் அண்மைக் காலமாக ஓபிஎஸ் செயல்பாடுகள் தீவிரமாகி வருகின்றன.
பாஜக காத்திருக்கிறது
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் நாராயணசாமி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுகவின் நாஞ்சில் சம்பத் பேசுகையில், " மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே - உத்தவ் தாக்கரேவை பிரித்தது பாஜக தான். அந்த கட்சியின் வில்லுக்கும் அம்புக்கும் இரு தரப்பினர் இடையே சண்டை நடப்பது போல் தமிழகத்தில் இரட்டை இலைக்கு சிக்கல் வர வேண்டுமென மத்திய பாஜக காத்துக் கொண்டிருக்கிறது.
ஒன்றுபட்ட அதிமுக
ஆனால் அதிமுக ஒன்றுபட வேண்டுமென திமுக விரும்புகிறது. அதனால் தான் சட்டமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அருகே எடப்பாடி பழனிசாமிக்கு இடம் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்தார். தொடர்ந்து, சமீபத்தில் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி போன்ற தலைவர்களை மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைத்தார்.
மு.க.ஸ்டாலின் பற்றி நாஞ்சில் சம்பத்
இதே போல் இந்தியா முழுவதும் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் தகுதி இந்திய அரசியலில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மட்டுமே உள்ளது. திமுகவின் தேவை தமிழகத்தோடு நின்று போவதில்லை. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தேவைப்படும் காலம் இது என்று தெரிவித்தார். அதிமுகவை ஒன்றிணைக்க திமுக விரும்புவதாக நாஞ்சில் சம்பத் பேசிய கருத்துக்கள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.