கூரை வீட்டில் இருந்து கோட்டைக்குப் போகும் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்துவின் வெற்றிப்பயணம்
திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து வசிப்பது கூரை வீட்டில். ஏழை வேட்பாளர் ஒருவர் கோட்டைக்குள் எம்எல்ஏவாக செல்லப்போகிறார்.
திருவாரூர்: பணக்காரர்களும், கோடீஸ்வரர்களும் மட்டும்தான் அரசியலில் வெற்றி பெறமுடியும் எம்எல்ஏவாக அமைச்சராக வலம் வர முடியும் என்றில்லை. சேவை மனப்பான்மையோடு செயல்படுபவர்களைத் தேடி பதவி வரும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குடிசை வீட்டில் வசித்து வரும் ஏழை ஒருவர் எம்எல்ஏவாக வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்லப்போகிறார். அவர் பெயர் மாரிமுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு மக்கள் வாக்களித்து சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள மாரிமுத்துவிற்கு கடுவுக்குடி என்ற ஊரில் வசிக்கும் இவருக்கு குடிசை வீடுதான் உள்ளது.
49 வயதான மாரிமுத்து கடந்த 1994ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவரது தாயரும் மனைவி ஜெயசுதாவும் விவசாயக கூலி தொழில் செய்கின்றனர். மகனும், மகளும் பள்ளியில் படிக்கின்றனர். வீட்டில் கேஸ் அடுப்பு கிடையது. மண் அடுப்பில்தான் சமையல் செய்கின்றனர்.
தீயாய் எழுந்து நின்றாய்-.வான்போல் வளர்ந்து நிற்கிறாய்- முதல்வராகும் ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து
மாரிமுத்துவிற்கு 75 சென்ட் நிலம் இருக்கிறது. அதன் மதிப்பு 1.75 லட்சம். வங்கிக் கணக்கில் ரூ.58,000 உள்ளது. அவரது கையில் ரொக்கமாக இருக்கும் பணம் ரூ.3000,அவரது மனைவி, மகளுக்கு 3 பவுன் தங்க நகைகள் மட்டுமே உள்ளன.
இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரின் சொத்து மதிப்பு ஆவணங்களின்படி ரூ.20 கோடிக்கும் மேல் உள்ளது. கோடீஸ்வர வேட்பாளரை எதிர்த்து களமிறங்கி வெற்றியை தன் வசப்பபடுத்தியுள்ளார் ஏழை விவசாய வேட்பாளர் மாரிமுத்து.
சட்டசபைத்தேர்தல் முடிவுகள் வெளியான உடன் அம்மாவும் மனைவியும் அதிகமாக சந்தோஷப்பட உடனடியாக ஆசி பெற்று விட்டு அடுத்த வேலையை பார்க்க கிளம்பி விட்டார். ஜெயித்த பிறகுதான் நிறைய வேலையிருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் இந்த பகுதியில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு ஏதாவது நிச்சயம் செய்ய வேண்டும் என்பதுதான் எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள மாரிமுத்துவின் கனவு.