இந்தி பேசும் வங்கி அதிகாரிகளை உடனே மாற்றுங்கள்..திருவாரூர் மக்கள் போர்க்கொடி
திருவாரூர் : திருவாரூர் அருகே. வங்கியில் இந்தி பேசும் அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள், மாற்றாவிட்டால் வங்கி முன்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு நாடு முழுவதும் இந்தியை பொது மொழியாக கொண்டு வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை உறுதி செய்யும் வகையில், இந்தி மொழி தெரியாத தமிழகத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள், ரயில்வே அலுவலகங்கள், தபால் நிலையங்கள் உள்பட மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பேசும் வடமாநிலங்களை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் உள்ளது.

இதனால் வங்கி சேவைகளை பெற விரும்பும் ஆங்கிலம் அல்லது இந்தி தெரியாத தமிழர்கள், அன்றாட சேவைகளை கூட பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். தமிழர்கள் ஒன்று சொல்ல, மறுமுனையில் இருக்கும் வடமாநிலங்களை சேர்ந்தவர்களால் அதனை புரிந்துகொள்ள முடியாத சூழலும் உள்ளது.
அதுபோன்ற சம்பவம், திருவாரூர் அருகேயும் அரங்கேறியுள்ளது.
அந்த மாவட்டத்தின் பெருந்தரக்குடி கிராமத்தில், மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. குளிக்கரை, பெருந்தரக்குடி, தேவர்கண்டநல்லூர், அம்மையப்பன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டு இந்த வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்கியில் பணியாற்றி வந்த மேலாளர் திடீரென வேறு வங்கி கிளைக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து, வங்கி மேலாளர் அப்பாலா மற்றும் துணை மேலாளர் அமித்கட்டாரியா ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வங்கிக்கு வரும் கிராமப்புறங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களிடம், இவர்கள் இருவரும் இந்தியில் மட்டும் பேசி வருகின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கித் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களிடம் இந்தி மட்டுமே பேசி வரும் இவர்கள் இருவரையும், உடனடியாக மாற்ற வேண்டுமென, ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தலைமையில், தஞ்சாவூர் மண்டல அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தினங்களுக்குள் புதிய மேலாளர் நியமிக்கப்படுவார்கள் என வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொறுமையிழந்த கிராம மக்கள், வரும் திங்கட்கிழமை வங்கி முன்பு ஒன்று திரண்டு, போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் இந்த எச்சரிக்கையை அடுத்து இந்தி பேசும் வங்கி அதிகாரிகள் மாற்றப்படுவார்களா? கிராம மக்களின் நியாயமான இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.












Click it and Unblock the Notifications