நடிகர் விஷால் ஆந்திரா அரசியலில் குதிக்கிறாரா? குப்பம் தொகுதியில் போட்டியா? திருப்பதியில் 'பரபர'
திருப்பதி: லத்தி திரைப்படத்தின் புரமோஷனுக்காக திருப்பதி கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் நடிகர் விஷால். இந்த நிகழ்ச்சிகளில் நடிகர் விஷாலிடம் மாணவர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் ஆந்திர மாநில பத்திரிகைகளில் பிரதான செய்தியாக இடம்பெற்றிருக்கின்றன.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் 2017-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலி போட்டியிடுவதாக அறிவித்து தமிழக அரசியலில் கால் வைத்தார் நடிகர் விஷால்.

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் போட்டியிடப் போவதாக விஷால் அறிவித்த போது அவருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்தார். அத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், டிடிவி தினகரன், திமுக மருது பாண்டியன், ஜெ.தீபா என பலரும் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் நடிகர் விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த கால கட்டத்தில் தம்முடைய அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்; போராடும் மக்களுக்காக உடன் நிற்பேன்; கன்னியாகுமரி குளச்சலில் மக்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டு லைம் லைட்டில் இருந்தவர்தான் விஷால்.
அதன்பின்னர் இரும்புத்திரை படத்தின் 100-வது நாள் விழாவில் திடீரென மக்கள் நல இயக்கம் என ஒன்றை ஆரம்பித்தார் விஷால். இதனால் விஷால் அரசியலில் இறங்கப் போகிறார்; கட்சித் தொடங்கப் போகிறார்; அதற்கான முன்னோட்டம்தான் மக்கல் நல இயக்கம் என வேகமாக பேசப்பட்டது. மேலும் மிக முக்கியமான அரசியல் தலைவர் பின்னணியில்தான் விஷால் இத்தகைய அரசியல் போக்கை வெளிப்படுத்துகிறார் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
தற்போது திமுக ஆட்சியில் அதிகாரத் தலைமைக்கு மிக நெருக்கமானவராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் விஷால். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விஷாலும் கல்லூரி கால நண்பர்கள் என்பதால் இதனை வெளிப்படுத்துகிறார் நடிகர் விஷால். அத்துடன் தமிழக அரசியல் தொடர்பாக விமர்சன கருத்துகளை விஷால் முன்வைப்பதும் இல்லை.
இந்நிலையில்தான் லத்தி திரைப்படத்தின் புரமோஷனில் நடிகர் விஷால் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தின் புரமோஷனுக்காக ஆந்திராவின் திருப்பதியில் பல்வேறு கல்லூரிகளுக்கு சென்றார் விஷால். திருப்பதி எஸ்டிஹெச்ஆர் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார் விஷால். அப்போது, உங்களை கவர்ந்த அரசியல்வாதி யார் என்ற கேள்விக்கு ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி என பதிலளித்தார். தமது 46 வயதில் முதல்வரானவர் ஜெகன் மோகன் ரெட்டி என பட்டியலிட்டு அவரை புகழ்ந்து தள்ளினார். ஜெகன் மோகன் ரெட்டிக்கு டிசம்பர் 22-ந் தேதி பிறந்த நாள்.
இதேபோல் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த விஷால், குப்பம் பகுதியில் எங்கள் குடும்பத்தின் கிரானைட் குவாரி உள்ளது. அந்த பகுதியை நான் நன்கு அறிவேன். அதற்காக குப்பம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என நினைத்தது இல்லை. அரசியலுக்கு வந்துதான் ஒருவர் சேவை செய்ய வேண்டும் என்பது இல்லை. நான் தற்போது சினிமாவில் நடிப்பதையே மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்கிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியிலும் உங்கள் நண்பர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிவிட்டாரே என மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது மகிழ்ச்சி. அவர் சினிமா துறைக்கு மிகவும் ஆதரவாக இருப்பார் என நம்புவதாக கூறினார்.












Click it and Unblock the Notifications