தொடங்கியது புரட்டாசி மாதம்.. திருப்பதியில் குவிந்த பக்தர்கள்.. ஐதீகம் என்ன சொல்கிறது தெரியுமா?
திருப்பதி: புரட்டாசி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பாதை யாத்திரையாகவும், வாகனங்களில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை நேற்று முதல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இம்மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
இந்த மாதத்தில் ஒரு நாளிலாவது பெருமாளை தரிசனம் செய்தால் கோடி புண்ணியம் கிட்டும் என்பது நம்பிக்கை. எனவே இந்தியா முழுவதுமிருந்து பக்தர்கள் இக்கோயிலுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

உகந்த மாதம்
இந்து மதத்தில் சிவனை போலவே பெருமாளையும் பெரும்பாலான மக்கள் வழிப்படுகின்றனர். பெருமாளுக்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் நவ ராத்திரி, மகாளய அமாவாசை என பல விழாக்கள் இருக்கின்றன. அதையும் கடந்து புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதற்கு காரணம், இந்த மாத்தில்தான் பெருமாள் பூமிக்கு வந்ததாக நம்பப்படுகிறது. எனவேதான் இம்மாதம் பெருமாளுக்கான மாதமாக கருதப்படுகிறது.

நோன்பு
பொதுவாக பெருமாளை வழிபடுபவர்கள் சனிக்கிழமைகளில் அசைவம் உண்ண மாட்டார்கள். அதே புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் நோன்புடன் பெருமாளை வழிபடுவார்கள். அதேபோல சனிபகவானையும் பக்தர்கள் வழிபடுவார்கள். ஏனெனில் இந்த மாத்தில்தான் சனிபகவானிடமிருக்கும் தீய எண்ணங்கள் அதன் பலத்தை இழக்கிறது எனவும், இதனால் சனி பகவானை வழிப்பட்டால் நன்மை நடக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. v

ஐதீகம்
அதேபோல பெருமாளை வேண்டிக்கொண்டு மாவிளக்கும் வீட்டில் ஏற்றுவார்கள். அதாவது திருமலையில் இருக்கும் பெருமாள், தன்னுடைய பக்தர்கள் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அவ்வாறு அவரை காண செல்ல முடியாத பக்தர்கள் அவரை நினைத்து வீட்டில் மாவிளக்கு ஏற்றுவார்கள். விளக்கை ஏற்றி 'கோவிந்தா' என உச்சரிப்பதன் மூலம் பெருமாளின் ஆசியை நேரடியாக பெற முடியும் என்பது ஐதீகம். எனவே புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இதனால்தான் மாவிளக்கு ஏற்றப்படுகிறது.

தரிசனம்
இவ்வளவு சிறப்பு வாய்ந்த புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் திருமலை நோக்கி அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கியுள்ளனர். சுமார் 30 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 82,392 பேர் திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். 41,800 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். அதேபோல ரூ.5.59 கோடி உண்டியல் வசூல் செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications