திருப்பதிக்கு இலவச தரிசன டிக்கெட் வாங்க போறீங்களா?.. அப்ப முதல்ல இதை படிங்க பாஸ்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 7 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை இருப்பதாக சொல்லப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆகியவை ஆன்லைன் மூலம் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் வெளியிடப்படும் டிக்கெட்டுகள் 10 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டுவிடும்.
இதனால் இணையதள சேவையை பயன்படுத்தத் தெரியாதவர்கள், இணையதள வசதி வேகத்தில் குறைவாக இருக்கும் பகுதியினர் ஆன்லைன் டிக்கெட்டுகளை பயன்படுத்தி ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.
ரூ. 9.2 கோடியை காணிக்கையாக.. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தந்த சென்னை பெண்.. ஏன் தெரியுமா?
30 ஆயிரம்
இதனால் நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேர் முதல் 30 ஆயிரம் பேர் வரை மட்டுமே திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறார்கள். ஆன்லைனில் புக் செய்யப்படுவதால் சொந்த ஊர்களில் இருந்து நேராக மேல் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தரிசனத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பி விடுகிறார்கள். இதனால் சுற்றியுள்ள இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லும் வேன், ஜீப், கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தார்கள். கீழ் திருப்பதியிலும் தனியார் தங்கும் விடுதிகள் ஆளின்றி கிடந்தன.
தரிசன டிக்கெட்
இந்த நிலையில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் ஏழுமலையானை வழிபடும் வகையில் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதற்காக கடந்த 15 ஆம் தேதி காலை 9 மணி முதல் நாளொன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆன்லைனில் டிக்கெட்
இதன் மூலம் பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட் பெற இயலாத சூழல் சரி செய்யப்பட்டது. இந்த டிக்கெட்டுகளை பெற பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய காத்திருக்கும் சூழல் உள்ளது.
எத்தனை நாட்கள்
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில, இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர் ஒருவர் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 4, 5 நாட்கள் வரை ஆகிறது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று, 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று விவரங்களை உடன் கொண்டு வர வேண்டும் என்றார்.