திருமலை சாலையில் உருண்டு வந்த பாறை... பேருந்தை நிறுத்திய டிரைவர் - தப்பிய பக்தர்கள்
திருமலையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்து சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் சென்ற பயணிகள் தப்பினர்.
திருப்பதி: திருமலையில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டியதால் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் மலையில் இருந்து பாறை உருண்டு விழுந்து சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் பேருந்தை ஒட்டிவந்த டிரைவர் சட்டென்று வாகனத்தை நிறுத்தியதால் எந்த வித பாதிப்பும் இன்றி பக்தர்கள் உயிர் தப்பினர்.
ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர். கடந்த 15நாட்களுக்கு முன்பு திருமலையில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்த காரணத்தால் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் மலைப்பாதையில் நடந்து செல்லவும் போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டது. சில தினங்கள் வரை சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் டிசம்பர் மாத தரிசனத்திற்காக டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சில நிமிட நேரங்களில் விற்றுத்தீர்ந்தன. திருச்சானூரில் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
திருமலை மலைப்பாதையில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டதால் திருப்பதி திருமலை இடையே வாகன போக்குவரத்தை நிறுத்தி வைத்த தேவஸ்தானம் தற்காலிகமாக சரி செய்து மீண்டும் வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது.
இன்று காலை 6 மணி அளவில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் சாலையில் திருமலைக்கு அருகில் உள்ள வளைவு ஒன்றின் மேற்பகுதியில் இருந்து சுமார் 5 டன் எடையுள்ள பெரிய பாறை திடீரென்று சரிந்து விழுந்தது.
அங்கிருந்து சரிந்த பாறை மலைப்பாதையில் அடுக்கடுக்காக உள்ள மூன்று இடங்களை தாண்டி சென்று நின்றது. இதனால் மலைப்பாதையில் மூன்று இடங்களில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டு மரங்களும் சரிந்து விழுந்துள்ளன. மேலும் சாலையில் உள்ள பல்வேறு இடங்களில் பெரிய விரிசலும் பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன.
அப்போது தேவஸ்தான ஊழியர்கள், பக்தர்கள் ஆகியோரை ஏற்றி கொண்டு திருமலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக கவனித்து பேருந்தை நிறுத்தி விபத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்றினார். அவர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படாமல் இருந்திருந்தால் பேருந்து முழுவதுமாக பாறை சரிவில் சிக்கி பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். சமயோஜிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுனரை பயணிகள் பாராட்டினர்.
விபத்து பற்றி கூறிய பேருந்து ஓட்டுனர் காலை நேரத்தில் திருப்பதி மலை முழுவதும் மேகமூட்டம் காணப்பட்டது. இதனால் எதிரில் இருப்பவர்களை கூட சரியாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. திடீரென மலைப் பகுதியிலிருந்து பெரிய சத்தம் கேட்டது. எனவே ஏதோ சரிந்து விழுகிறது என்பதை புரிந்து உணர்ந்து கொண்ட நான் உடனடியாக பேருந்தை பின்னால் இயக்கி நிறுத்தினேன் இதனால் விபத்தில் சிக்காமல் தப்பிக்க முடிந்தது என்று பேருந்து ஓட்டுனர் கூறினார்.
மண் சரிவு ஏற்பட்டதால் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்பதி மலைப்பாதையில் அவசரகால பயன்பாட்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இணைப்பு சாலை வழியாக வாகன போக்குவரத்தை தொடர்வது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
திருப்பதி திருமலை இடையே வாகனங்களில் பயணிக்கும் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications