அடுத்தடுத்து வரும் சந்திர, சூரிய கிரகணங்கள்.. அடைக்கப்படும் திருப்பதி கோவில்.. ஏன் தெரியுமா?
திருப்பதி: அக்டோபர் மாதமும், நவம்பர் மாதமும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை 11.30 மணி நேரம் சாத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறிப்பிட்ட நாட்களில் அனைத்து வகையான தரிசனமும் ரத்து செய்யப்பட்டு பொதுமக்களுக்கான இலவச தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Fact Check: திருப்பதி கோயிலில் பிரபல நடிகையிடம் ஊழியர்கள் தகாத முறையில் நடந்தனரா? உண்மை என்ன?
வேதம் என்ன சொல்கிறது?
நாகரீக காலம் தொட்டு மனிதன் சந்திர,சூரிய கிரகணங்களை எல்லா வகையிலும் பதிவு செய்து வைத்துள்ளான். இது குறித்து வேதங்களிலும் பல்வேறு தகவல்கள் காணக்கிடைக்கின்றன. ஒவ்வொரு சாஸ்திரங்களும் இது குறித்து வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. சுவர்பானு எனும் அசுரன் சூரியனை மறைத்து இருளை பரப்பியதாகவும், பின்னர் அத்ரி தேவர் நான்கு ரிக் வேத மந்திரங்களை கூறி அசுரனின் பிடியிலிருந்து சூரியனை காப்பாற்றினார் என்றும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
புராணம்
இதே பாகவத புராணத்தில் இது குறித்து வேறு தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. அதாவது, திருப்பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்த திருமால் அதை தேவர்களுக்கு மட்டுமே கொடுத்தார். ஆனால் இதை தெரிந்துகொண்ட ராகு எனும் அசுரன் தேவர்களின் வரிசையில் நின்று அமிர்தத்தை பெற்றுக்கொண்டான். இதை கண்டுபிடித்த சந்திர, சூரிய தேவர்கள் திருமாலிடம் போய் சொல்லிவிட்டனர். பின்னர் திருமால் ராகுவின் தலையை வெட்டிவிட்டார்.
சந்திர, சூரிய கிரகணம்
ஆனால் சிறிதளவு அமிர்தம் ராகு உடலுக்குள் சென்றுவிட்டதால் ராகு உயிருடனே இருந்தார். தன்னை காட்டிக்கொடுத்த சந்திர, சூரிய தேவர்களை அவர் கோபம் கொண்டு விழுங்கிவிட்டார். ஆனால் ராகுவின் தலை தனியாக இருந்த காரணத்தினால் சந்திரனும், சூரியனும் தொண்டை வழியாக வெளியேறிவிட்டனர். அவர் முழுங்கியபோது சந்திர, சூரியனின் ஒளி சிறிது நேரம் தடைப்பட்டதை சந்திர, சூரிய கிரகணமாக சொல்லப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு பக்தி இலக்கியத்திலும் வெவ்வேறு தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.
அறிவிப்பு
எனவே இந்த கிரகண காலத்தில் சில கடமைகளையும் சாஸ்திரங்கள் அறிவுறுத்தியுள்ளன. அதன் அடிப்படையிலேயே கோயில்களின் நடைகள் அடைக்கப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 25ம் தேதி நடைபெற உள்ள சூரிய கிரகணத்தின் காரணமாக திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் கதவுகள் அடைக்கப்படும். காலை 8.11 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை இந்த கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தரிசனங்கள்
மேலும், நவம்பர் 8ம் தேதி பிறபகல் 2.39 மணியளவிலிருந்து மாலை 6.27 மணி வரை சந்திர கிரகணத்தையொட்டி கோயில் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த இரு நாட்களிலும், பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
மாறாக இலவச தரிசனத்தில் வரும் சாதாரண பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.