இதுதான் உங்க மதச்சார்பின்மையா? பிரதமர் மோடியை பாருங்க.. முதல்வர் ஸ்டாலின் செயலால் பொங்கிய அண்ணாமலை!
திருப்பூர் : மு.க.ஸ்டாலின் மற்ற மத நிகழ்வுகளுக்கு முண்டியடித்து வாழ்த்து சொல்வதும், இந்துக்களின் பண்டிக்கைக்கு வாழ்த்து சொல்லாமல் மவுனம் காப்பதும்தான் மதச்சார்பின்மையா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு என அனைத்து மதத்தினருக்கும் வாழ்த்து சொல்கிறார். அவரைப் பார்த்து ஒரு மதத்திற்காக ஆட்சி செய்வதாக ஸ்டாலின் கூறுவது வேடிக்கை என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மத மோதலுக்கு முதலமைச்சர் வித்திடுகிறார். தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் பேசக்கூடிய கட்சியாக திமுக உள்ளது என்றும் பேசியுள்ளார் அண்ணாமலை.

விநாயகர் சதுர்த்தி விழாவில் அண்ணாமலை
திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. நேற்று திருப்பூர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமலாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டன. முன்னதாக ஆலங்காடு பகுதியில் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

கொள்ளையடிக்கவே கூட்டாட்சி
அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "கேரளாவில் நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி பற்றி பேசியிருக்கிறார். 2004 - 2014-ஆம் ஆண்டு வரை மத்தியில் கூட்டாட்சி இருந்ததால் இந்தியா பின்னோக்கிச் சென்றது. கொள்ளையடிப்பதற்காகவே கூட்டாட்சி கொள்கை என்று பேசப்படுகிறது. 8 ஆண்டுகளில் பெரும்பான்மையோடு ஒரு கட்சி ஆட்சி செய்ததால் சுயசார்பு பாரதம் சாத்தியமானது.

மத மோதலுக்கு வித்திடுகிறாரா
மாநிலத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மற்ற மத நிகழ்வுகளுக்கு முண்டியடித்து வாழ்த்து சொல்வதும், இந்துக்களின் பண்டிக்கைக்கு வாழ்த்து சொல்லாமல் மவுனம் காப்பதுதான் மதச்சார்பின்மையா? இதன் மூலம் மத மோதலுக்கு முதலமைச்சர் வித்திடுகிறார்.

ஆன்மீக பூமி
ஆனால் பிரதமர் மோடி இஸ்லாமிய பண்டிகைக்கு, கிறிஸ்துவ பண்டிகைக்கு என அனைத்து மதத்தினருக்கும் வாழ்த்து சொல்கிறார். ஆனால் அவரைப் பார்த்து ஒரு மதத்திற்காக ஆட்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறுவது வேடிக்கையானது. இந்தியாவிலேயே ராமர் கோயிலுக்கு அதிக நிதி கொடுத்த 3 மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது. இது ஆன்மீக பூமியாகவே இருக்கிறது.

பிரிவினைவாதம்
தமிழ்நாட்டின் பிரிவினைவாதம் பேசக்கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. மக்களுக்கான ஆட்சியாக இந்து வாழ்வியல் முறையிலான ஆட்சி தேவைப்படுகிறது. யோகா, ஆயுர்வேதம், சித்தா என கொண்டு வந்த பிறகு நம் இந்து வாழ்வியல் முறையை முறியடிக்க Anti hindu alliance என அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு பத்திரிகைகளில் இந்திய அரசுக்கு எதிராக எழுதி வருகின்றனர்" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications