ஜாதி பெயரை சொல்லி திட்டுறாங்க.. தலைமை ஆசிரியை மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டும் பள்ளி மாணவிகள்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பணியாற்றும் தலைமை ஆசிரியை மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாக புகார் அளித்துள்ளனர்.
Recommended Video
கழிவறையை சுத்தம் செய்யாத மாணவிகளை சாதிப் பெயரை சொல்லித் திட்டுவதாகவும் அளித்த புகாரில் பள்ளிக் கல்வித்துறை அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மாணவிகளின் புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என தலைமை ஆசிரியை உறுதி அளித்துள்ளார்.

திருப்பூர் அருகே உயர்நிலைப்பள்ளி
திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 14 ஆசிரியர்கள் இந்த பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தந்து வருகின்றனர். இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக கடந்த 3 ஆண்டுகளாக கீதா என்பவர் பணியாற்றி வருகிறார். கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பள்ளியில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

மாணவிகள் புகார்
இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறைக்கு புகார் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் பள்ளித் தலைமை ஆசிரியை கீதா மீது அடுக்கடுக்காக புகார்கள் கூறியுள்ளனர். தலைமை ஆசிரியை கீதா மாணவ மாணவிகளை அவதூறாக பேசுவதாகவும், பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவர்களை பார்த்து தரக்குறைவான வார்த்தைகளிடம் திட்டுவதாகவும் புகார் அளித்தனர். மேலும் பட்டியலின மாணவர்களிளை பார்த்து உங்களுக்கு படிப்பு எதற்காக என்றெல்லாம் கேள்வி எழுப்புவதாகவும், பள்ளிக் கூட கழிவறையை சுத்தம் செய்யுமாறு உத்தரவு போடுவதாகம் அந்த புகாரில் தெரிவித்திருந்தனர்.

பள்ளிக் கல்வி அலுவலர் விசாரணை
மாணவிகளின் புகாரை ஏற்றுக்கொண்ட திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அலுவலர் ரமேஷ் இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை ரமேஷிடன் கண்ணீர் மல்க தெரிவித்தனர். தலைமை ஆசிரியை கீதா தங்களை கொடுமைப்படுத்தவதாகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியை கீதாவை அழைத்து மாணவிகள் முன்னிலையில் ரமேஷ் விசாரணை மேற்கொண்டார். இதற்கு பதில் அளித்த கீதா அப்படி எதுவும் நடக்கவில்லை.

மன்னிப்பு கோரினார் தலைமை ஆசிரியை
ஒழுங்காக படிக்கவில்லை என திட்டியதால் மாணவிகள் தவறாக புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியையிடம் தொடர்ந்து விசாரித்த ரமேஷ், புகாரின் உண்மைத் தன்மை இருப்பதை உறுதிப்படுத்தினார். தலைமை ஆசிரியரும் வேறு வழியின்றி நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று இனி இப்படி செய்யமாட்டேன் என மன்னிப்பு கோரினார். ஆனாலும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியை கீதாவிடம் தொடர்ந்து குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இடுவாய் பள்ளி தலைமை ஆசிரியரின் இந்த செயல் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications