தனிநபர் இடைவெளின்னா என்ன விலை என கேட்கும் திருப்பூர் மீன் சந்தை- அலைமோதிய ஆயிரக்கணக்கான ஜனக் கூட்டம்
திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் மீன் சந்தையில் இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தனிநபர் இடைவெளியைப் பற்றி எந்த கவலையுமே இல்லாமல் அலைமோதிக் கொண்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா லாக்டவுனின் தொடக்கம் முதலே சனி, ஞாயிறுகளில் திறக்கப்பட்ட இறைச்சி கடைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தன. இதனால் பல மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் செயல்படவே தடை விதிக்கப்பட்டன.

தனிநபர் இடைவெளி கட்டாயம்
இதன்பின்னர் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. தற்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்கிறது. இருப்பினும் தனிநபர் இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் அணிதல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன. முக கவசம் அணியாமல் சென்றால் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

அலைமோதிய கூட்டம்
தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான இடங்களில் இறைச்சி கடைகளில் கூட்டம் வழக்கம் போல அலைமோதியது. மிக குறுகிய இடங்களில் உள்ள இத்தகைய கடைகளில் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதே சாத்தியமே இல்லாத ஒன்றாகவும் இருக்கிறது.

திருப்பூர் மீன்சந்தை
இதில் திருப்பூர் தென்னம்பாளையம் மீன்சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம்தான் மலைக்க வைக்க வைத்திருக்கிறது. பரந்துபட்ட இடத்தில் சந்தை அமைந்த போதும் ஆயிரக்கணக்கான மக்கள் தனிநபர் இடைவெளியைப் பற்றி கிஞ்சித்தும் கவலையேபடாமல் மீன்களை வாங்குவதிலேயே குறியாக இருந்தனர். இப்படி பெருந்திரளாக மக்கள் கூடும் இடத்தில் காவல்துறையினரும் இல்லை என்பதுதான் வேதனைக்குரியது. அதேபோல் கடை உரிமையாளர்களும் கூட வாடிக்கையாளர்களை அறிவுறுத்தவும் இல்லை.
Recommended Video

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
திருப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 114 ஆக இருந்தது. தற்போது ஒருவருக்கு கூட பாதிப்பு இல்லை. இதனால் திருப்பூர் பச்சை மண்டலமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமல் மீன்சந்தை போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குவிவது பெரும் அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள்.












Click it and Unblock the Notifications