சுபஸ்ரீ மரண வழக்கு: வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை..அரசுக்கு ஈஷா யோகா மையம் கோரிக்கை
திருப்பூர்: சுபஸ்ரீ மரணம் தொடர்பாக அவதூறு பரப்பப்படுவதாக ஈஷா யோகா மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஈஷா யோகா மையம் கோரிக்கை வைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த பழனிகுமார் என்பவரின் மனைவி சுபஸ்ரீ. இந்த தம்பதிக்கு 11-வயதில் ஒரு மகளும் உள்ளார். தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த சுபஸ்ரீ கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஈஷா யோகா மையத்துக்கு வந்து யோகா பயிற்சி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் யோகா பயிற்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த டிசம்பர் 18ம் தேதி காலை ஈசா யோகா மையத்துக்கு சென்றுள்ளார். பின்னர் யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ளார்.
சுபஸ்ரீ கொலை? கணவருக்கு மாலை.. ஜக்கியை போலீஸ் விசாரிக்கனும்! மோடி ஈஷா வந்துள்ளார் - முத்தரசன் பகீர்
சிசிடிவி கேமரா காட்சிகள்
அதன் பின்னர் அங்கு நடைபெற்ற யோகா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு இருக்கும் அவரை பயிற்சி முடிந்த பிறகு அழைத்துச் செல்ல கணவர் பழனிகுமார் ஈஷா யோகா மையம் சென்று இருக்கிறார். ஆனால் பயிற்சி வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட தனது மனைவி வராததால் அதிர்ச்சியடைந்த பழனிக்குமார் வரவேற்பு அறையில் இருந்தவர்களிடம் தனது மனைவி குறித்து விசாரித்துள்ளார். இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது சுபஸ்ரீ காலை 9:30 மணிக்கு கால் டாக்ஸியின் மூலம் ஏறி சென்றது தெரியவந்தது.
கிணற்றில் பெண்ணின் சடலம்
இதையடுத்து, குறிப்பிட்ட கால் டாக்சி ஓட்டுநரிடம் விசாரித்த போது சுபஸ்ரீயை அங்குள்ள இருட்டுப்பள்ளம் அருகே இறக்கிவிட்டு சென்றதாக கூறியிருக்கிறார். தனது மனைவி இருப்பிடமும் அவரைப்பற்றிய தகவலும் இல்லாததால் அதிர்ந்து போன பழனிக்குமார் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து 6 தனிப்படைகள் அமைத்து மாயமான சுபஸ்ரீயை போலீசார் தேடி வந்து உள்ளனர். கடந்த 1 ஆம் தேதி செம்மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டனர்.
ஈஷா யோகா மையம் கண்டனம்
இது சுபஸ்ரீயின் சடலம் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சுபஸ்ரீ மரணம் தொடர்பாக அவதூறு பரப்படுவதாக ஈஷா யோகா மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈஷா யோகா மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: -சுபஶ்ரீ மரணம் துரதிஷ்டவசமானது. இந்த துயர சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மரணம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
சந்தேகங்களை ஊதிப் பெரிதாக்கி..
சுபஸ்ரீ குறித்த வழக்கு பதிவாகி காவல்துறை விசாரணையை துவங்கியது முதல் இன்று வரை விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் முறையாக வழங்கி உள்ளோம். காவல்துறை தனது விசாரணையை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் வெற்று சந்தேகங்களை ஊதிப் பெரிதாக்கி, அபத்தமான அனுமானங்களை அள்ளி இரைத்து வதந்திகளையும், அவதூறுகளையும் ஒரு சில இயக்கங்களும், ஊடகங்களும் உள்நோக்கத்தோடு செய்திகளாக வெளியிடுவதும், பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
குறிப்பாக ஈஷாவின் வளர்ச்சியை விரும்பாதவர்கள் தற்போதைய சூழலை உள்நோக்கத்துடன் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். மிகவும் திட்டமிட்ட முறையில் ஈஷாவுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, ஊடகங்களின் மூலமாக அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு வன்மமான அவதூறுகள் மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தை பரப்பும் நபர்கள், இயக்கங்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சரியான முறையில் செயல்படுகிறது
ஈஷா யோகா மையம் முழுமையான வெளிப்படைதன்மையுடன் இயங்கி வருவதுடன், வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமான அரசாங்க அமைப்புகளின் ஆய்வுகளுக்கு உட்பட்டு சரியான முறையில் செயல்பட்டு வருகிறது. விழிப்புணர்வான உலகத்தை உருவாக்கும் எங்கள் நோக்கத்தையும், உறுதியையும் எவராலும் களைத்து விடமுடியாது. உண்மையின் பாதையில் உள்ளவரை பொய்மை வெகுகாலம் வெல்ல இயலாது. உண்மை தன்னைத் தானே வெளிப்படுத்தி கொள்ளும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.