தேச பாதுகாப்பு விஷயம்.. விளையாட்டு இல்லை.. ‘அரசியல் வேண்டாம்’.. திமுகவை விமர்சித்த எல்.முருகன்!
திருச்சி : தேசத்தின் முக்கியத்துவம் தெரியாமல் திமுக தவறான ஓட்டு வங்கி அரசியலைச் செய்யக்கூடாது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
என்ஐஏ சோதனை விவகாரத்தை வைத்து திமுக தவறான அரசியலை செய்யக் கூடாது என பாஜகவை சேர்ந்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் இந்த தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

கடும் தாக்குதல்
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "கோயம்புத்தூர், திண்டுக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள், தொழில் நிறுவனங்கள் மீது ஒரு கும்பல் கடுமையான தாக்குதல்களை நடத்திக் கொண்டு இருக்கிறது.
இச்சம்பவத்தில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

திமுக இளங்கோவன்
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தி சிலரை கைது செய்திருக்கிறது. ஆனால் மத்திய அரசு என்ஐஏவை தவறாக பயன்படுத்துவதாக திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தேச பாதுகாப்பில் விளையாட்டு வேண்டாம்
தேசப் பாதுகாப்பில் விளையாடக்கூடாது. தேசத்தின் பாதுகாப்பு, இந்தியாவின் இறையாண்மை கேள்விக்குறியாகும் நிலையில் என்ஐஏ சோதனை நடத்தப்படுகிறது. தேச பாதுகாப்பின் முக்கியத்துவம் தெரியாமல், இந்த விவகாரத்தை வைத்து திமுக தவறான ஓட்டு வங்கி அரசியலை செய்யக்கூடாது.

கடுமையான நடவடிக்கை தேவை
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பாஜக கட்சி நிர்வாகிகள், இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை குறி வைத்து, ஒரு கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. தமிழக அரசு, இதில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications