டிடிவி தினகரனை சந்திப்பேன்.. கொளுத்திப்போட்ட ஓபிஎஸ்! ‘கூட்டணி அச்சாரம்’ பழைய பாசம்.. இணையும் கைகள்!
திருச்சி : டிடிவி தினகரனை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டால் கண்டிப்பாகச் சந்திப்பேன் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில், இப்போதே 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சுகளும், விவாதங்களும் தீவிரமடைந்துள்ளன.
கூட்டணிக்கு அதிமுகவே தலைமை வகிக்கும் என எடப்பாடி பழனிசாமி, நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அதனை ஏற்றுக்கொண்டார்.
கூட்டணி அமைத்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும், திமுகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பதற்காக எப்போதும் நேசகரம் நீட்டுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தெரிவித்தார்.

கூட்டணி பற்றி எடப்பாடி
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2024 தேர்தல் கூட்டணி பற்றிப் பேசியது அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பியது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். நாமக்கல்லில் நடக்கும் இந்தக் கூட்டம் அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிள்ளையார் சுழி போடுகின்ற கூட்டம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், நாமக்கல் தொகுதியில் யார் போட்டியிட்டாலும், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று பேசினார்.

பலம் வாய்ந்த கூட்டணி
அதேசமயம், அந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நீக்கப்பட்டவர்கள் இனி மீண்டும் சேர்க்கப்பட மாட்டார்கள், மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார். மெகா கூட்டணி அமைப்பதாகச் சொன்ன எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் விருப்பமான அதிமுக ஒன்றிணைவுக்கு எதிராகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக தலைமையில் தான் கூட்டணி என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமையேற்கும் என்று தனது கருத்தையும் வெளிப்படுத்தினார்.

கூட்டணி பற்றி தினகரன்
இந்நிலையில், நேற்று தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணியால்தான் முடியும். திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்க தயார். கூட்டணியின் தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்வோம். எனவே ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி வைக்க வேண்டும், தி.மு.க.வை வீழ்த்துவதற்காக அமைக்கப்படும் கூட்டணிக்கு நேசக்கரம் நீட்ட தயார் எனத் தெரிவித்தார்.

தினகரனை சந்திப்பேன் - ஓபிஎஸ்
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தஞ்சை செல்லும் நிலையில் இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் கூட்டணி தொடர்பான பேச்சுகள் பற்றியும், தினகரனின் கருத்து பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், "தேர்தல் கூட்டணி குறித்து டிடிவி தினகரன் கூறியது வரவேற்கத்தக்கது. டிடிவி தினகரனை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டால் கண்டிப்பாகச் சந்திப்பேன்." எனத் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை இல்லை
மேலும் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் தலைமையில் பிரச்சனை உள்ளது போல் மாயத் தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. சில பிரச்சனைகள் இடையிடையே வரும், அனைத்தும் போகப்போக சரியாகப் போய்விடும். அதிமுக இடத்தை பாஜக பிடிக்கப் பார்க்கிறது என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதிமுக ஒற்றுமையை பாஜக குலைக்கவில்லை. எங்களை யாராலும் மிரட்ட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

சந்திப்பு
பல மாதங்களாகவே, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் சந்திப்பு நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், 2024 தேர்தல் கூட்டணி பற்றி டிடிவி தினகரன் பேசியிருப்பதை வரவேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், வாய்ப்பு கிடைத்தால் அவரை சந்திப்பேன் என்று கூறியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இடையேயான நட்பு 25 ஆண்டுகளைக் கடந்தது. இடையே அவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்புகள் ஏற்பட்டிருந்தாலும் சமீபகாலமாக இருவரும் ஒத்த கருத்தையே பேசி வருகின்றனர்.

சேர்மன் - பாசம்
1996ஆம் ஆண்டு பெரியகுளம் நகர்மன்ற சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது முதலே டிடிவி தினகரனுக்கும் நெருக்கமானவர் ஆனார் ஓபிஎஸ். அப்போது ஓபிஎஸ்ஸை 'சேர்மன்' என அழைக்கத் தொடங்கிய தினகரன், ஓபிஎஸ் அமைச்சர், முதல்வர் என வளர்ந்த பிறகும் கூட பழைய பாசத்தோடு சேர்மன் என்று அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் நின்று எம்.பி ஆனவர் டிடிவி தினகரன். இதனால் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உண்டு.

தேர்தலைக் குறிவைத்து
2017ஆம் ஆண்டு முதல் இருவருக்கும் இடையே நல்ல உறவு இல்லாத நிலையில், ஈபிஎஸ் -ஓபிஎஸ் மோதலுக்குப் பிறகு, ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவே பேசி வருகிறார் தினகரன். அதேபோல, ஓபிஎஸ்ஸும் தினகரனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறார். இந்நிலையில், 2024 தேர்தலைக் குறிவைத்து, அதிமுக கூட்டணியில் இணையும் முடிவில் தினகரன் இருந்து வரும் நிலையில், அவரைச் சந்திக்க வாய்ப்பிருப்பதாக ஓபிஎஸ் பேசியுள்ளார்.
-
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications