என்ட்ரி போடாமல் லாரி உள்ளே வந்தது எப்படி... பாதுகாப்பு போலீஸாரிடம் இனிகோ இருதயராஜ் கிடுக்கிப்பிடி..!
திருச்சி: திருச்சி ஜமால் முகமது கல்லூரி வளாகத்திற்குள் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உரிய அனுமதியின்றி லாரி உள்ளே நுழைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இந்த நிகழ்வு குறித்து நம்மிடம் விவரிக்கிறார் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ்;
அதன் விவரம் பின்வருமாறு;
''திருச்சி கிழக்கு தொகுதி வாக்குப்பெட்டிகள் ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அங்கு தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் எனது சார்பில் பிரதிநிதிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கணினி, எல்.இ.டி. தொலைக்காட்சி, மற்றும் வயர்களுடன் லாரி ஒன்று கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித் திரிவது குறித்து எனக்கு தகவல் கிடைத்தது.''
''இதையடுத்து அங்கு சென்று பார்த்தேன், இதில் கொடுமை என்னவென்றால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் யாரும் அந்த லாரி எங்கிருந்து வருகிறது, ஏன் வருகிறது என்பதை பற்றியெல்லாம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து அங்கு போலீஸ் கமிஷனர் வந்திருக்கிறார். லாரி சுற்றுவதை பார்த்துவிட்டு அங்கிருந்த போலீஸாரிடம் அழைத்து விவரம் கேட்டிருக்கிறார்.''
''அப்போது ஒருவர் மாநகராட்சியில் இருந்து வந்த லாரி என்றும் மற்றொருவர் ஆர்.ஓ.அனுப்பிய லாரி எனவும் மாறி மாறி பதில் அளித்திருக்கின்றனர். நானும் நிகழ்விடத்திற்கு சென்றேன். சிசிடிவி காட்சிகளை ஆராய வேண்டும் காட்டுங்கள் எனக் கூறினால் அதைக் காட்ட மறுத்தார்கள். நான் விடாமல் நின்று கேட்டதை தொடர்ந்து காட்டினார்கள். அதைப் பார்த்தால் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகத்திற்கு எந்தவித என்ட்ரியும் போடாமல் அசால்டாக லாரி உள்ளே நுழைந்ததையும், ஓட்டுநருக்கு வழி தெரியாமல் கட்டிடம் விட்டு கட்டிடத்துக்கு லாரியை திருப்பியதும் தெரிய வருகிறது.''
தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் ... எல். முருகனை விசாரியுங்க.. டெல்லிக்கு காவடி தூக்கிய பாஜக சீனியர்கள்
''நேற்று நான் சென்ற போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் ரூல்ஸ் பேசியதுடன் ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்தார்கள். இன்று என்னவென்றால் ஒரு லாரி உள்ளே வருவது எதற்காக என்று கூட விசாரிக்காமல் அவர்கள் நின்றிருக்கிறார்கள். இந்த சம்பவத்தை எல்லாம் திமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றுவிட்டேன். தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளேன்'' எனத் தெரிவிக்கிறார் இனிகோ இருதயராஜ். ''