பரபர மூவ்.. உதயநிதியை அமைச்சராக்குங்க.. திண்டுக்கல், திருச்சி திமுக கூட்டங்களில் அதிரடி தீர்மானம்!
உதயநிதியை அமைச்சராக்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்சி: எம்எல்ஏ உதயநிதியை அமைச்சராக்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிகேணி தொகுதியில் மட்டும் சொந்தம் கொண்டாடமல் 234 தொகுதிகளிலும் சொந்தம் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் அவர் பொறுப்புக்கு வர வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதமே பேசியவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
Recommended Video
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும். இது எனது விருப்பம் மட்டுமல்ல. சேப்பாக்கம் தொகுதி மக்கள் உள்ளிட்ட பலரது விருப்பம். மக்களுக்காக உழைக்கும் உதயநிதியின் திறமை ஒரு தொகுதியுடன் சுருங்கி விடக்கூடாது என்றும் தெரிவித்தார். இதனையடுத்து பல அமைச்சர்களும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று பேசி வருகின்றனர்.

19 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர்
திமுக ஓராண்டு நிறைவு விழாவை சில தினங்களுக்கு முன்பு கொண்டாடியது. அப்போதே அவர் அமைச்சராக்கப்படுவார் என்றும் அவருக்கான துறைகள் என்னவாக இருக்கும் என்பது முதற்கொண்டு செய்திகள் வலம் வந்தன. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் 19 மாதங்களுக்குப் பிறகு அமைச்சராவார் என்று சமீபத்தில் தாமே அன்பரசன் பேசியிருந்தார்.

முதல்வர் ஆலோசனை
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று அவரது நண்பரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாகவும் , இதனால் விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 3ல் அறிவிப்பு வெளியாகுமா
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி உதயநிதி ஸ்டாலினை திமுக அமைச்சராக அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பின் படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. கைவசம் உள்ள படங்கள்தான் கடைசி படங்களாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அன்பில் மகேஷ் தீர்மானம்
இந்த நிலையில் உதயநிதியை அமைச்சராக்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. முதல்வர் மு.க ஸ்டாலின் நல்ல செய்தி சொல்வாரா பார்க்கலாம்.

திண்டுக்கல் தீர்மானம்
இதே பாணியில் திண்டுக்கல் கிழக்கு ,மேற்கு மாவட்ட திமுக செயற்குழுவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அர.சக்கரபாணி மற்றும் எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உதயநிதிக்கு தமிழக அமைச்சரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications