மொக்கை மொக்கையா மீம்ஸ் போடுகிறோம்.. வேறென்ன செய்கிறோம்.. மாரி செல்வராஜ் வேதனை
திருச்சி: மொக்கை மொக்கையா மீம்ஸ்களை ஷேர் பண்றோமே தவிர இந்த ஆணவ கொலைக்கு எதிராக நாம் எதையாவது பகிர்கிறோமா? என்று இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சாதிக்கு எதிராக செல்போன் வழியாகவே போராடலாம் என்றும் தயவுசெய்து மௌனத்தை கலைத்து போராட இறங்குங்கள் என்றும் மாரி செல்வராஜ் அறைகூவல் விடுத்துள்ளர்.
திருச்சியில் பரியேறும் பெருமாள்' பட பாராட்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசினார்.
அப்போது அவர், தனது படத்தின் 50-வது நாள் விழாவின் மகிழ்ச்சியை விட ஓசூரில் நடந்த ஆணவக் கொலையை பற்றிதான் முழுவதுமாக பேசினார். அப்போது அவர் ஆணவ கொலைகள் சம்பந்தமான கேள்விகளை எழுப்பியதுன், கண்ணீர் ததும்ப மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

அடித்தே கொலை
டைரக்டர் பேசும்போது சொன்னதாவது: இந்த படத்தின் 50-வது விழா காலைலதான் கொண்டாடினோம். ஆனா சாயங்காலமே ஓசூர்ல ஒரு ஆணவ கொலை நடந்திருக்கு. பெற்றவர்களே அந்த கணவன் - மனைவியை அடித்தே சின்னாபின்னமாக்கி கொலை செய்திருக்கிறார்கள்.

அப்படியே விடக்கூடாது
இவ்வளவு தீராத வலி தருகிற சாதிக்கு எதிராக நாம் என்ன செய்யப்போகிறோம். நாம் மீண்டும் மீண்டும் செய்ற மிகப்பெரிய தவறு, இப்படிப்பட்ட சம்பவங்களைப் பார்த்துட்டு, துன்பப்பட்டு விட்டு, அதனை கடந்து சென்றுவிடுகிறோம். அப்படி நாம் கடந்து செல்லக் கூடாது. ஓர் உரையாடலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம்தான் பரியேறும் பெருமாள்.

அழுத்தம் தர வேண்டும்
நம் அனைவரும் ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு 'மொக்க வீடியோவையும் மீம்ஸ்களையும்தான் ஷேர் பண்றோம்.' ஆனால், இந்த மாதிரியான ஆணவக் கொலைகளை பகிர்வதே இல்லை. இந்த ஆணவக் கொலையை மிக உக்கிரமான செய்தியாக மாற்ற வேண்டிய தேவையும் கடமையும் நமக்கு இருக்கிறது. அதைச் செய்து அரசாங்கத்துக்கு ஓர் அழுத்தத்தை தர வேண்டும்.

இருட்டடிப்பு
ஏனெனில், ஆணவக் கொலைக்கு என்று ஒரு தனிச்சட்டம் இல்லை. அரசாங்கம் ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டில் நடப்பதில்லை என்கிறது. ஆணவக் கொலைகள் தமிழகத்தில் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. சாதிக்கு எதிரான படைப்புகளை பாராட்டுகிறோம், ஆனால், நிஜத்தில் அதைச் செய்யத் தவறுகிறோம்.

செல்போன் போதும்
சாதிக்கு எதிரான உக்கிரமான போராட்டங்கள் நடைபெற வேண்டும். போராட்டம் என்பது களத்தில் இறங்கிப் போராடுவது மட்டும் அல்ல. நமது கைகளிலேயே போராட்டம் இருக்கிறது. செல்போன் வழியாகவே போராடலாம். தயவுசெய்து உங்களுடைய மௌனத்தைக் கலைத்துவிடுங்கள்.

அருவருப்பானவர்கள்
இது ஒரு சாதி சங்க பிரச்சனை இல்லை. சமூக பிரச்சனை. தயவு செய்து இதற்கு உக்கிரமான எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். தொடர்ச்சியான அமைதி அருவருப்பான மனிதர்களாக மாற்றிக்கொண்டே போகும். அவர்களை அருவருப்பானவர்களாக மாற்றுங்கள். அப்போதுதான் நாம் மனிதத்துடன் இருப்பதாக உணர முடியும்.

காதல் அனாதையாகி விடும்
சட்டம், சமூகம் , தலைவர்கள் யார் இருப்பினும் காதல் மட்டுமே சாதியை உக்கிரமாக எதிர்க்கிறது. காதலுக்குச் சாதி தெரியாது. சாதிக்குக் காதல் புரிவதில்லை. எனவேதான், சாதிய ஆதரவாளர்கள் காதலை இவ்வளவு கொடூரமாக அழிக்க நினைக்கின்றனர். அதனாலே, காதலை அநாதையாக விட்டுவிடுவார்களோ என்ற அச்சம் மேலோங்குகிறது.

சாதி மறுப்பு திருமணம்
காதல் மட்டுமே சாதியத்திலிருந்து சமூகத்தை விடுவிக்கிறது. மாரி செல்வராஜ் ஏன் இதை இவ்வளவு உணர்ச்சிபூர்வமாகச் சொல்கிறான் எனில், ``சாதிய ஆணவக் கொலையிலிருந்து தப்பித்த ஒருவன் எடுத்த படம்தான் பரியேறும் பெருமாள்.'' அப்படி இருந்தும் மீண்டும் காதலித்து சாதிமறுப்புத் திருமணம் செய்திருக்கிறேன்.

ஏன் பேச மறுக்கிறார்கள்
பெரியவர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது. சிறியவர்கள் மீது சாதிய அருவருப்பைத் திணிக்கிறீர்கள். இளவரசன், கோகுல்ராஜ் ஆணவக்கொலை அவ்வளவாக இச்சமூகத்தை உலுக்கவில்லை. ஆனால், சங்கர் கொலை உலுக்கியது. காரணம் அந்தக் கொலையை வீடியோ மூலம் இச்சமூகம் பார்த்தது. அதன் கொடூரத்தை உணர்ந்தது. ஆனால், நிர்பயா, சுவாதிக்குக் குரல் கொடுப்பவர்கள் 'ராஜலெட்சுமி'க்காக ஏன் பேச மறுக்கிறார்கள்.

சமூக மாற்றம் வேண்டும்
மூத்த தமிழ் சமூகத்துக்கு எதிரான படம்தான் பரியேறும் பெருமாள். நீங்கள் எங்களை இயங்கவிட்டால் இச்சமூகத்தில் மாற்றம் நிகழும். உங்களது சாதிய அழுக்கை எங்களுக்குத் தயைகூர்ந்து கடத்த வேண்டாம். சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிரான உங்களை மாற்றும் படமாக 'பரியேறும் பெருமாள்' இருப்பின் அதுவே அதன் வெற்றி" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications