"எமர்ஜென்சியை பார்த்த இயக்கம் திமுக.. சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம்".. அண்ணாமலைக்கு கேஎன் நேரு பதிலடி
திருச்சி : "எமர்ஜென்சியை பார்த்த இயக்கம் திமுக, திமுகவினர் பார்க்காத எதிர்ப்பா? எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் கேஎன் நேரு பதிலடி கொடுத்தார்
Recommended Video
திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் ஆதார மேம்பாட்டுத் திட்டத்தில் தரைமட்டத் தொட்டி கட்டுதல், பெரியார் நகர், கம்பரசம்பேட்டை நீர் சேகரிப்பு கிணற்றில் புதிதாக நீர் சுற்றுவட்ட குழாய்கள் அமைத்தல், மோட்டார் பம்புசெட் டீசல் ஜெனரேட்டர் சமநிலை நீர்த்தேக்கத் தொட்டி, நீர் பரிசோதனை ஆய்வகம் மற்றும் நடை பாலம் அமைக்கும் பணி என ரூ. 28 கோடியே 42 லட்சம் மதிப்பிலான பணிகளை திருச்சி உறையூர் காவல் நிலையம் அருகே குடிநீர்த் தொட்டி வளாகத்தில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்திகளுக்கு பேட்டி அளித்த கே.என்.நேரு, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை குடிநீர் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி வருகிறோம். 17 வார்டுகளில் 24/7 குடிநீர் வழங்கும் வகையில் 28.5 கோடி ரூபாய் செலவில் இந்த பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. விநியோகிக்க கூடிய தண்ணீர் கலங்கலாக இல்லாமல் சுத்தமான குடிநீராக வழங்கும் வகையில் புதிய இயந்திரம்(Aerator) 5 கோடி ரூபாய் செலவில் வைக்கப்பட உள்ளது.

திருச்சி தண்ணீர் விநியோகம்
திருச்சி மாநகராட்சிக்கு அடுத்த 30 ஆண்டுகளுக்கு குடிநீர் விநியோகிக்க தேவையான திட்டம் தான் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம். அங்கிருந்து போதுமான அளவு தண்ணீர் விநியோகிக்கும் வசதி உள்ளது. மக்கள் தொகை பெருகினாலும் அத்திட்டத்தில் தண்ணீர் விநியோகிக்க மேலும் பல வசதிகள் செய்து தரப்படும். அடுத்த ஓர் ஆண்டில் திருச்சி மாநகராட்சி மக்களுக்கு 24/7 என்கிற அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகிக்கப்படும்.

குடிநீரில் கலக்கும் சாக்கடை
ஏற்கனவே போடப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் சரி இல்லாத காரணத்தால் குடிநீரோடு சாக்கடை நீர் கலக்கிறது,அவற்றை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கம்பரசம்பேட்டையில் குடிநீர் விநியோகிக்க பயன்படும் பழுதடைந்துள்ள ஆழ்குழாய் கிணறுகள் சரி செய்யப்படும்.

பாஜக அண்ணாமலை
இதனைத் தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் உண்ணாவிரத போராட்டத்தில் தலைவர் அண்ணாமலை பாரதிய ஜனதாவுக்கு கட்சிக்கும் இடையூறு ஏற்படுமானால் திமுகவின் பிசினஸில் கை வைப்போம் என கூறினார் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

எமர்ஜென்சியை பார்த்தவர்கள்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே என் நேரு, தி.மு.க வினர் எதிர்ப்பை சமாளிக்கும் வலுவோடு தான் இருப்பார்கள். தி.மு.க சந்திக்காத எதிர்ப்பா, எமர்ஜென்சியையே எதிர்த்த இயக்கம் தி.மு.க. அண்ணாமலை புதிதாக பா.ஜ.க வின் தலைவராகியிருக்கிறார். அதனால், அவர் மக்களிடம் பெயர் வாங்கவே இது போன்று பேசுகிறார். நாங்கள் தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும். சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். தவறு செய்தால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

என் ஊரை பற்றி கேளுங்கள்
அப்போது செய்தியாளர் ஒருவர் தேசிய அளவிலான பிரச்சனை குறித்து கேள்வி எழுப்ப முயன்றார்.அதற்கு அமைச்சர் கே.என். நேரு. இதெல்லாம் இந்திய அளவில் உள்ள பிரச்சனை,இதை பற்றி முதலமைச்சர் பதில் சொல்வார். நான் ஒரு தொகுதி எம்எல்ஏ , அமைச்சர். ஒரு தொகுதிக்கு வேலை செய்ய வந்துள்ளேன்.என்ன பற்றி கேளுங்கள், என் தொகுதியை பற்றி கேளுங்கள். அல்லது உள்ளூர் அரசியலை பற்றி கேளுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications