3 வயது குழந்தை கடத்தல்.. 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்.. ‘சிசிடிவியில் இளம்பெண் உருவம்’.. யார் அவர்?
திருச்சி : ஸ்ரீரங்கம் பகுதியில் 3 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் போலீசார் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், சிசிடிவி காட்சிகளை சல்லடை போட்டு ஆய்வு செய்து சிறுவனை கடத்திய இளம்பெண்ணின் உருவத்தைக் கண்டறிந்துள்ளனர். அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சிறுவனைக் கடத்திய இளம்பெண் எதற்காக அவரை விட்டுச் சென்றார் என்பது பற்றியும், வேறு குழந்தைகள் யாரேனும் கடத்தப்பட்டுள்ளனரா என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சிறுவன் கடத்தல்
திருச்சி ஸ்ரீரங்கம் பழைய இபி சாலையைச் சேர்ந்தவர் முருகன். இவர் மூங்கில் கூடை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் ராகவன் (3) நேற்று சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமாகியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால், சிறுவன் ராகவன் கடத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதி, சிறுவன் காணாமல் போனது குறித்து அவரது பாட்டி சம்பூரணம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சமயபுரம் - ஸ்ரீரங்கம்
இந்நிலையில் சமயபுரம் பேருந்து நிலையம் பகுதியில் சிறுவன் ஒருவன் தனியாக நின்று அழுது கொண்டிருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அந்தக் குழந்தையை மீட்டு சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சமயபுரம் காவல்துறையினர் ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் விரைந்து சென்று ராகவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸ் வலைவீச்சு
தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில், குழந்தையை கடத்திச் சென்ற இளம்பெண்ணின் உருவம் பதிவாகியுள்ளதை கண்டனர். இதைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிந்துள்ள உருவத்தின் அடிப்படையில் குழந்தையை கடத்திய அந்த இளம்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஏன் விட்டுச் சென்றார்?
மேலும், அப்பகுதியில் வேறு குழந்தைகள் யாரேனும் காணாமல் போயிருக்கிறார்களா என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடத்திச் சென்ற பெண் சமயபுரத்தில் இக்குழந்தையை விட்டுவிட்டுச் சென்றது ஏன் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவேளை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியதை அறிந்து விட்டுச் சென்றாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications