முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீடு! 3.5% லிருந்து 5% ஆக அதிகரிக்கணும்! தமுமுக புதிய கோரிக்கை!
திருச்சி: முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு அளவை 5 விழுக்காடாக அதிகப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அரசுக்கு புதிய கோரிக்கை விடுத்துள்ளது.
திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் இக்கோரிக்கையை தனித் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது அவ்வமைப்பு.
இட ஒதுக்கீடு தொடர்பாக தமுமுக நிறைவேற்றிய தீர்மான விவரம் வருமாறு;
வராத 108.. தமுமுக ஆம்புலன்ஸ் வராவிட்டால் பலி உயர்ந்திருக்கும் -தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை
அரசியல் சூழ்ச்சி
அரசியல் சூழ்ச்சிகளால் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் தாமதிக்கப்பட்ட சமூகநீதியைப் பெற்றிட கருணாநிதி வழங்கிய 3.5 தனி இடஒதுக்கீடு உதவியது. முஸ்லிம் சமுதாயத்தின் பின்னடைவு நிலையை அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அரசு அமைத்த நீதிபதி ராஜிந்தர் சச்சார் உயர்நிலைக்குழு, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளின் ஒளியில் உற்று நோக்கினால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இடஒதுக்கீட்டின் போதாமை புலப்படும்.
கருணாநிதி பரிசீலித்தார்
முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டு அளவை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கருணாநிதி கனிவோடு பரிசீலித்தும் கூட, அதை நிறைவேற்ற கால அவகாசம் கைகூடவில்லை. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீடு அளவை கனிவன்போடு பரிசீலித்து குறைந்தபட்சம் 5 சதவீதமாகவேனும் அதிகரித்திட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
இடஒதுக்கீடு -வெள்ளை அறிக்கை
கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் கடந்த காலங்களில் மிகப்பெரிய குளறுபடிகள் நடந்துள்ளன. முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமுமுகவின் ஜீவாதாரக் கோரிக்கையை ஏற்று முத்தமிறிஞர் கலைஞர் வழங்கிய 3.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் பல இடங்களில் செய்த குளறுபடிகளால் முஸ்லிம்களுக்கான வாய்ப்புகள் பறிபோயுள்ளன.
வாய்ப்பு பறிப்பு
கடந்த அதிமுக ஆட்சி பாஜகவின் கைப்பாவையாகச் செயல்பட்டதால் முஸ்லிம் சமுதாயத்திற்கு கல்வி வேலை வாய்ப்புகளில் கடுமையானப் பாதிப்பு மிக நுணுக்கமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைக் களைந்திடும் வண்ணம் தமிழகத்தை ஆளும் சமூகநீதி அரசு, முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு பயனாளிகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். பின்னடைவுப் பணியிடங்களைக் கணக்கிட்டு அவற்றிலும் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய வாய்ப்பை வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.