திருப்பாச்சி பட பாணியில் திருச்சியில் கொலை.. போஸ்டர் அடித்து கொலை செய்த ரவுடி கும்பல்!
திருச்சி: திருச்சி அருகே நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் வருவது போல் விரைவில் கொலை நடைபெறும் என முன்னதாகவே போஸ்டர் அடித்து ரவுடியின் தம்பியைக் கொலை செய்த கொலையாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended Video
நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் வில்லன் ஒருவரை ஹீரோ விஜய் கொல்வது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதில் வில்லன் அகால மரணமடைந்தார் என ஹீரோ விஜய் போஸ்டர் அடித்து அவரது வீட்டு முன் ஒட்டியதோடு குறிப்பிட்ட நேரத்தில் அவரை கொல்வது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் திருச்சி அருகே திருப்பாச்சி பட பாணியில் போஸ்டர் அடித்து அதில் விரைவில் எனக் குறிப்பிட்டு, சிறையில் உள்ள ரவுடியின் தம்பியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சியில் கொலை
திருச்சி மாவட்டம் திருப்பெரும்பூர் அருகே பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் பெலிக்ஸ் ஜான்சன். 28 வயது இளைஞரான அவர் அப்பகுதியில் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார் . இந்நிலையில் நேற்று இரவு சரக்கு ஆட்டோவில் வீட்டுக்கு சென்றபோது ஜான்சனை வழி மறித்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது.

ரவுடியின் தம்பி கொலை
எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜான்சன் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். கொலை குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருபெரும்பூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஜான்சன், அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான அலெக்ஸ் என்பவரின் தம்பி என எனத் தெரியவந்தது.

போலீசார் விசாரணை
அலெக்ஸ் மீது திருச்சி மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள பல்வேறு காவல்நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அலெக்ஸ்க்கு எதிர்கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், கொலையாளிகள் யார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போஸ்டரிலேயே எச்சரிக்கை
அதில் பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த சின்ராஜ் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாக அலெக்ஸ் தற்போது சிறையில் உள்ளார் . சின்ராஜ் கொலை செய்யப்பட்டபோது ஒட்டப்பட்ட போஸ்டர்களில் சின்ராஜ் அகாலமரணம் அடைந்தார் அவரது இறுதி ஊர்வலம் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் அவரது இல்லத்தில் இருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

பழிக்கு பழியாக கொலை
அதே நேரத்தில் அடைப்புக்குறிக்குள் விரைவில் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது அதாவது சின்ராஜ் கொலைக்கு பழிக்குப்பழியாக மீண்டும் ஒரு கொலை நடைபெறும் என்பதை சின்ராஜ் ஆதரவாளர்கள் முன்னரே குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் உள்ள நிலையில் ஜான்சனை சின்ராஜ் ஆதரவாளர்கள் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்றும் இதுகுறித்து சின்ராஜின் ஆதரவாளர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். திருச்சி அருகே சினிமா பட பாணியில் முன்னரே குறிப்பிட்டு போஸ்டர் அடித்து பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது












Click it and Unblock the Notifications