திருச்சி காவிரி பாலம் பராமரிப்பு! நாளை முதல் 5 மாதம் மூடப்படும் என அறிவிப்பு! போக்குவரத்தில் மாற்றம்
திருச்சி: திருச்சி காவிரி பாலம், பராமரிப்புப் பணிகளுக்காக நாளை நள்ளிரவு முதல் தற்காலிகமாக மூடப்பட உள்ள நிலையில், போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில், திருச்சி காவிரி பாலமும் ஒன்றாக திகழ்கிறது. திருச்சி - ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்தப் பாலம், கடந்த 1976-ம் ஆண்டு, முன்னாள் மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சர் பிரம்மானந்தா ரெட்டியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்தப் பாலம் திருச்சி மக்களின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக விளங்கி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்தப் பாலத்தின் வழியாக பயணிக்கின்றன.

பழுதான பாலத்தால் பாதிப்பு
பழமையாக திருச்சி காவிரி பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் பலமுறை சீர் செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்து பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். இதனையடுத்து, பாலத்தின் விரிசல்களை சீர்செய்யும் பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. அண்மையில் பெய்த மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

பராமரிப்புக்காக பாலம் மூடல்
இந்நிலையில், திருச்சி காவிரி பாலம், 6 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பாலத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை நள்ளிரவு முதல் தற்காலிகமாக மூடப்படும் என மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் வழியாக செல்லும் வாகன போக்குவரத்து நாளை நள்ளிரவு முதல் நிறுத்தப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார். மேலும், இதற்காக போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

போக்குவரத்து மாற்றம்
அதன்படி, ஸ்ரீரங்கம் செல்லும் பேருந்துகள், ஓடத்துறை ரயில்வே பாலம், கும்பகோணத்தான் சாலை வழியாக திருவானைக்காவல் அடைந்து ஸ்ரீரங்கம் செல்லலாம். அதேபோன்று, ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்காவல் மேம்பாலத்தின் வழியாக, கும்பகோணத்தான் சாலை மற்றும் ஓயாமரி வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்லலாம். திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள், நகர வழி போக்குவரத்தை தவிர்த்து, புறவழிச்சாலை வழியாக சஞ்சீவி நகர் மார்க்கமாக டோல்கேட் அடைந்து சென்னை செல்லலாம். அதுபோல, சென்னையில் இருந்து திருச்சி வரும் வாகனங்களும், டோல்கேட் புறவழிச்சாலை மார்க்கமாக திருச்சி அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு கோரிக்கை
திருச்சி காவிரி பாலம், பராமரிப்புப் பணிகளுக்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றுப்பாதையில் பயணம் செய்து, பாலம் பராமரிக்கும் பணிக்காக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications