திருச்சியில் உள்ள சர்ச்சில் திடீரென முட்டி போட்டு நடந்தபடி பிரார்த்தனை செய்த விஜய்.. பின்னணி என்ன?
திருச்சி: திருச்சி வயர்லெஸ் சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் தவெக தலைவர் விஜய் முட்டிப் போட்டு வந்து பிரார்த்தனை மேற்கொண்டிருக்கிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் சிறுபான்மை சமூக மக்கள் அதிகளவில் இருந்து வரும் சூழலில், விஜய் மீண்டும் தன்னை கிறிஸ்தவராக அடையாளப்படுத்தி கொண்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அத்தனை கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விஜய் கடந்த 4 நாட்களாகவே பிரச்சாரம் எதுவும் செய்யாமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்தார். தவெக தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின் பெரம்பூர் தொகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தை மட்டும் பார்வையிட்டு விசில் கோலம் போட்டார்.

இதன்பின் அடுத்த நாள் காலையில் பெரம்பூர் தொகுதியில் விஜய் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த பிரச்சாரத்தையும் விஜய் ரத்து செய்தார். அதேபோல் கடலூர் செல்லவிருந்த திட்டத்தையும் கைவிட்டார். தர்மபுரியில் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை என்று பிரச்சாரத்தை ரத்து செய்தார்.
இந்த சூழலில் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ரோடு ஷோ நடத்தி இருக்கிறார். இதற்காக காலையிலேயே சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக புறப்பட்ட விஜய், திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். இதன்பின் திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்த வயர்லெஸ் சாலையில் இருக்கும் புனித அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார்.
அந்த தேவாலயத்தில் விஜய் முட்டிப் போட்டு வந்து பிரார்த்தனையில் ஈடுபட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக விஜய் மீண்டும் தான் ஒரு கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் சுமார் 35% வாக்காளர்கள் கிறிஸ்தவர்கள் தான்.
இதன் காரணமாகவே விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட முடிவு எடுத்தார். ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போது 2வது முறையாக ரோடு ஷோ சென்றதோடு, தேவாலயத்திலும் பிரார்த்தனை செய்திருக்கிறார். இன்று காலை கிறித்துவ ஆயர்கள் முதலமைச்சரை சந்தித்து திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
அதேபோல் தேவாலயங்களில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. இப்படியான சூழலில் சிறுபான்மையினர் வாக்குகளை பெற விஜய் முயற்சிப்பதாக பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த செயல் தவெகவுக்கு பலன் கொடுக்குமா என்பதை மே 4ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியிடும் போதுதான் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications