"ஆமா, நான் அப்படிப்பட்ட பொண்ணுதான்.." அமவுண்ட்டுடன் அப்பீட்டான அபிநயா.. தவிக்கும் சின்னத்தம்பி
திருச்சி: மயிலாடுதுறை அருகே இளைஞரை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய பெண்ணிடம் இருந்து நகை மற்றும் பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (28). வெளிநாட்டில் பணிபுரியும் இவர் திருமணம் செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் சின்ன தம்பிக்கும் வில்லியநல்லூர் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த அபிநயா(18) என்பவருக்கும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நிச்சயம் செய்யப்பட்டது.

காதல் பரிசுகள்
சின்னதம்பி, அபிநயா மீது அதீத காதல் கொண்டதால் அவருக்கு செல்போன் மற்றும் 2 பவுன் தங்கச்சங்கிலி ஆகியவை வாங்கி கொடுத்துள்ளார். அத்தோடு விட்டாரா.. அவரது தந்தைக்கும் இருசக்கர வாகனம் முதல் அபிநயா கேட்ட அனைத்தையும் சின்னதம்பி வாங்கிக் கொடுத்துள்ளார்.

இங்க இருந்த பொண்ணக் காணோம்
இந்தநிலையில் கடந்த வாரம் அபிநயாவை நேரில் சந்திக்க சின்னத்தம்பி மயிலாடுதுறை சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் வராததால் மனமுடைந்த சின்னதம்பி அபிநயாவை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பெண்ணின் வீட்டாரிடம் கேட்டபோது அபிநயா வந்ததும் தகவல் சொல்கிறோம் என சின்ன தம்பியிடம் கூறியுள்ளனர். சில நாட்கள் கழித்து அபிநயா காணாமல் போனதை அறிந்த சின்னத்தம்பி பெண் வீட்டாரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்கள் தங்கள் மகள் காணாமல் போய்விட்டதாகவும் நாங்களும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம் என்றும் அலட்சியமாக பதில் சொல்லியுள்ளனர்.

நான் தப்பான பெண்
உடனடியாக சின்ன தம்பி தொலைபேசியில் அபிநயாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அபிநயா கூறிய பதில் அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான், வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை மறந்து விடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தான் தவறான பெண் என்றும், அதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்றும் அந்தப்பெண் கூறியதை கேட்டு சின்னதம்பி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்.

போலீசில் புகார்
தற்கொலை செய்யும் அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளான சின்னதம்பி.. தான் வாங்கிக் கொடுத்த மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனம் மற்றும் நிச்சயதார்த்தத்திற்கு செலவு செய்த 50 ஆயிரம் பணத்தை பெண் வீட்டாரிடம் கேட்டுள்ளார். அதை தந்து விடுகிறோம் என அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால், இதுநாள் வரை அவர்கள் அந்த பணத்தை கொடுக்காததால், சின்னதம்பி உறவினர்களுடன் சேர்ந்து மயிலாடுதுறை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் தாங்கள் இழந்த பணம் மற்றும் பொருட்களை மீட்டு தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைஞரை ஏமாற்றி அவரிடமிருந்து பெண் ஒருவர் பணம் மற்றும் பொருட்களை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications