ரத்தக்கறை படிந்த மர டேபிள்.. முக்கிய ஆவணங்கள்.. சீல் வைக்கப்பட்ட அறையை திறந்து தூக்கிச் சென்ற சிபிஐ!
தூத்துக்குடி : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை கடுமையாக தாக்க பயன்படுத்தப்பட்ட டேபிளையும், முக்கிய ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் 10 போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை கடுமையாக தாக்க பயன்படுத்தப்பட்ட டேபிளையும், முக்கிய ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.

போலீஸ் ஸ்டேஷனில் படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கினர். போலீசாரின் சித்ரவதையின் காரணாமக் முதல் நாள் இரவு பென்னிக்ஸூம் அடுத்த நாள் காலை அவரது தந்தை ஜெயராஜும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிபிஐ விசாரணை
இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி, அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த இரட்டைக் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

எஸ்.ஐ அறையில் முக்கிய ஆவணங்கள்
இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு 3 கார் மற்றும் 1 வஜ்ரா வாகனம் என 4 வாகனங்களில் வந்த சிபிஐ அதிகாரிகள், காவல் நிலையத்திற்குள் சென்று சீல் வைக்கப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷின் அறையில் இருந்த சீலை அகற்றி உள்ளே சென்றனர். அங்கு இருந்த வழக்கு சம்பந்தமான முக்கியமான ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

தாக்க பயன்படுத்தப்பட்ட மர டேபிள்
மேலும், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை கொடூரமாக தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட மர டேபிளையும் பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள் அதையும் வானகத்தில் வைத்து கொண்டு சென்றனர். சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவல் நிலையத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications