"கடம்பூர் ராஜுவுக்கு என் அன்பும் நன்றியும்".. கோவில்பட்டி விழாவில் நேருக்கு நேர் பாராட்டிய கனிமொழி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் எழுத்தாளர் கி ராஜநாராயணன் சிலை திறப்பு விழாவில் பேசிய திமுக எம்பி கனிமொழி, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நன்றி தெரிவித்தார்.
கரிசல் காட்டு இலக்கியத்தின் முன்னோடியான கி ராஜநாராயணன் கோவில்பட்டியில் உள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை மட்டுமே முடித்திருந்த நிலையில் அவரது படைப்புகளில் கரிசல் நிலவியல் இடம்பெற்றிருந்தது.
கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய முன்னோடியாக திகழ்ந்த கி ராஜநாராயணன் சாகித்ய அகாதெமி விருதை பெற்றுள்ளார். இவர் இலக்கிய சிந்தனை விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார். கரிசல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்பட்ட கி.ரா. கடந்த ஆண்டு இயற்கை எய்தினார்.
2வது முறையாக திமுக தலைவரான ஸ்டாலின்.. மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.. கி. வீரமணி வாழ்த்து
தமிழக அரசு
அவரது நினைவாக தமிழக அரசு சார்பில் ரூ 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே திறந்து வைத்தார். இந்த நிலையில் கோவில்பட்டி மணிமண்டபத்தில் நடந்த விழாவில் அமைச்சர் கீதா ஜீவன், கோவில்பட்டி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கேரள மாநிலம்
இந்த நிகழ்ச்சியில் கனிமொழி பேசுகையில் கேரள மாநிலத்தில் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அது போல் தமிழகத்தில் கொண்டாடப்படவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. ஆனால் தற்போது எழுத்தாளர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதையை தமிழக அரசு சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. இலக்கியவாதியான கி.ரா. எப்போதுமே மனிதர்களை நேசிக்கக் கூடிய ஒருவர்.
கனிமொழி பேச்சு
அவருடைய நினைவைப் போற்றக் கூடிய நிகழ்ச்சிகளில் கட்சி பேதமின்றி கலந்து கொண்டிருக்கக் கூடிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு என்னுடைய அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். பல பேர் எழுதுவதற்கு காரணமாக இருந்த கி.ரா.வுக்கு மரியாதை செலுத்தக் கூடிய வாய்ப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவாக்கித் தந்துள்ளார் என கனிமொழி எம்பி பேசினார்.
அரசியல் நாகரீகம்
பொதுவாக அரசியல் ரீதியாக என்னதான் விமர்சித்துக் கொண்டாலும் நேரில் பார்த்துக் கொள்ளும் போதும் பிறந்தநாள், கட்சி நிறுவன நாள், தேர்தலில் வெற்றி உள்ளிட்டவைகளின் போது ஒரு கட்சிக்கு மற்றொரு கட்சி வாழ்த்து சொல்வது அரசியல் மாண்பு, அரசியல் நாகரீகம். இது தமிழகத்தில் நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சட்டசபையில் அதிமுகவும் திமுகவும் நேருக்கு நேர் அத்தனை விமர்சனங்களை முன் வைத்துக் கொண்டாலும் நேரில் பார்த்துக் கொண்டால் நலம் விசாரித்துக் கொள்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சில சமயங்களில் பார்த்திருக்கிறோம். இதுதான் ஆரோக்கியமான அரசியல். இந்த பண்பாடு அரசியல் என்றில்லை எந்த துறையாக இருந்தாலும் போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்கக் கூடாது என்பது கற்றுக் கொடுக்கும்.
சிலைத் திறப்பு
இந்த அரசியல் நாகரிகத்தைத்தான் கி.ரா. சிலைத் திறப்பு விழாவில் கனிமொழி காட்டினார். அது போல் என்னதான் தொகுதி எம்எல்ஏவாக இருந்தாலும் ஆளும் கட்சியினரின் நிகழ்ச்சிகளை அது எத்தனை நலத்தை மக்களுக்கு கொடுத்தாலும் அதை புறக்கணிப்பதையே செய்வார்கள். ஆனால் கடம்பூர் ராஜு கட்சி பேதமின்றி கி.ரா. நிகழ்ச்சிக்கு சென்றது அவருடைய அரசியல் நாகரீகத்தையும் அவர் தொகுதி மீது வைத்துள்ள அக்கறையையும் காட்டுகிறது என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.