குலசேகரப்பட்டினம் தசரா..முத்தாரம்மனை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு அரசு அசத்தல் அறிவிப்பு
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க தமிழக போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அக்டோபர் 1 முதல் 10 ஆம் தேதி வரையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
நவராத்திரி என்றாலே தூத்துக்குடி மாவட்ட மக்களுக்குக் குலசை தசரா திருவிழாதான் சட்டென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பல ஊர்களிலும் உள்ள மக்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி 10 நாட்கள் விரதமிருந்து தசரா திருவிழாவில் கலந்துகொள்வார்கள். இதேபோல மாநிலம் முழுவதிலும் இருந்து, தசரா 10ஆம் நாள் திருவிழாவான சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண குலசைக்குப் படையெடுப்பார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். வேடமிடும் பக்தர்கள் கடந்த மாதம் முதலே பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கியுள்ளனர்.
குட்நியூஸ்! சென்னையில் வலம் வர போகும் நவீன பேருந்துகள்.. இவ்வளவு வசதிகளா! எப்படி இருக்கும் தெரியுமா?
குலசை முத்தாரம்மன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ளது குலசை. இத்திருக்கோயிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பிகை முத்தாரம்மனும் அருள்பாலிக்கிறார்கள். கங்கையில் நீராடி காசி விசுவநாதரையும் விசாலாட்சியையும் வழிபட்ட பயன் இங்குள்ள கங்கை கலக்கும் வங்கக்கடலில் நீராடி முத்தாரம்மனையும் ஞானமூர்த்தீஸ்வரரையும் வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தசரா பண்டிகை கொடியேற்றம்
முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா, இந்த ஆண்டு வருகிற 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அக்டோபம் 5ஆம் தேதி நள்ளிரவு சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி. சிவசங்கர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, குலசேரப் பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், வரும் 01.10.2022 முதல் 04.10.2022 வரை, சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப் பட்டினத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப் பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு வசதி
மேலும், பண்டிகை முடிந்து திரும்பிட ஏதுவாக, 06.10.2022 முதல் 10.10.2022 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி பேருந்து வசதியினை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.