தட்டார்மடம் கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தட்டார்மடத்தில் நிலத்தகராறு காரணமாக கடந்த 17ஆம் தேதி செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே செல்வன் என்பவர் கடத்திக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4வது நாளாக போராடி வருகின்றனர். இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட இருவர் சரண் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பில் வசிக்கும் தனிஷ்லாஸ் மகன் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். இவரை கடந்த 17-ந்தேதி மர்ம நபர்கள் காரில் கடத்தி கொலை செய்தனர். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தட்டார்மடம் அருகே உசரத்துகுடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும், இதனால் செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதுவரை இல்லாத அளவு குறைந்த பகல் நேர வெப்பம்.. உறைந்துபோன பெங்களூர்.. வானிலை மையம் எச்சரிக்கை
பொய் வழக்கு
அதிமுக பிரமுகர் திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பொய் புகார்களில் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியதாக செல்வனின் தாயார் எலிசபெத் புகார் கொடுத்து இருந்தார்.
திருமணவேல் சரண்
இதையடுத்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான திருமணவேல் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உடலை வாங்க மறுப்பு
இதனிடையே செல்வனின் உடலை நீதிபதி முன்னிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். செல்வனின் மனைவிக்கு நிவாரண உதவி, அரசு வேலை வழங்க வேண்டும் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4வது நாளாக போராடி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்போது அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட இருவர் சரண் அடைந்துள்ளனர். எனினும் இதுவரை தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பாக தூத்துக்குடி எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.
சிபிசிஐடி விசாரணை
கனிமொழி தனது டுவிட்டரில் :- " தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, செல்வன் என்பவர் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை. ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ என்ற ஐயம் எழுகிறது. உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா இல்லையா ?" என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.