கூடாரம் காலி.. எதிர்க்கட்சியே இல்லாத நிலை உருவாகும்.. அதிமுகவை சீண்டிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி: அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியே இல்லாத நிலை உருவாகும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2021ம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. ஒட்டுமொத்தமாக 159 இடங்களையும், திமுக மட்டும் 133 இடங்களையும் கைப்பற்றின. இதனைத்தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக ஆட்சியில் உள்ளது. இந்த ஓராண்டில் பல்வேறு பிரச்னைகளை திமுக அரசு சிறப்பாக கையாண்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே எதிர்க்கட்சியான அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இபிஎஸ் ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என்று பெரும்பான்மை நிர்வாகிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பில் இரட்டைத் தலைமை தொடர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளிடையே எதிர்க்கட்சிகள் யார் என்பது குறித்த விவாதம் எழுந்தது.
ஒரு பக்கம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக மக்களின் பிரச்னைகளை தமிழக அரசிடம் கொண்டு செல்வது பாமக தான் என்றும், இன்னொரு பக்கம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கொள்கை ரீதியாக திமுகவுக்கு நேரெதிராக பாஜக நின்று போராடி வருவதாக கூறி வருகிறார்.; இதேபோல் நாம் தமிழர் கட்சி சீமானும், அதிமுக தரப்பில் பிரதான எதிர்க்கட்சி தாங்கள் தான் என்றும் கூறினர்.
இந்தநிலையில் மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ள கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம் ஏற்பாட்டில் ஏரல் பேரூராட்சி 4 வார்டு அமமுக நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து பொன்னாடை அணிவித்து தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.
இந்தநிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எந்த குறையும் சொல்ல முடியாத அளவுக்கு அனைத்து ஜாதி, மதத்தினரை அரவணைத்து அமைதியான ஆட்சியை செய்து வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியைப் பார்த்து மாற்று கட்சியினர், கூட்டம் கூட்டமாக திமுகவில் இணைந்து வருகின்றனர். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலை உருவாகும் என்று தெரிவித்தார். அப்போது திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மணிவண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் இந்தப் பேச்சு, அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தை குறிப்பிடும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.