'ரீல்ஸ்' விபரீதம்.. வாயில் பட்டாசு வைத்து வெடித்த இளைஞர்.. 'பிளாஸ்திரி' பாயாக மாறிய பரிதாபம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரீல்ஸ் வீடியோவில் பிரபலமாவதற்காக, வாயில் பட்டாசு வைத்து வெடித்த இளைஞர் ஒருவர் வாய் வெந்து போய் பிளாஸ்திரியுடன் தற்போது சோகமாக சுற்றி வருகிறார்.
கெத்து காட்டுவதாக நினைத்துக் கொண்டு இளைஞர் செய்த காரியம் அவருக்கே வினையாக மாறியுள்ளதாக நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
விளையாட்டு ஆபத்தில் முடியும் என்பதற்கு ஒரு வீடியோ சாட்சியாகவே இந்த சம்பவம் மாறியுள்ளதாக மக்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மதுரை திருமங்கலம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி..முதல்வர் இரங்கல் - தலா.5 லட்சம் நிதி உதவி
வாழ்க்கையை இழக்கும் இளைஞர்கள்..
தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஒருபுறம் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்க, மறுபுறம் அவற்றால் ஆபத்துகளும் விபரீதங்களும் உருவாகிக் கொண்டிருப்தை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக, இன்றைய தலைமுறை இளைஞர்கள் இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் போன்ற சமூக வலைதளங்களுள் மூழ்கி தங்கள் வாழ்க்கை இழந்து வருகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், இவற்றால்தான் நாம் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது கூட அவர்களுக்கு புரிவதில்லை. எதற்கும் பிரயோஜனப்படாத 'லைக்ஸ்'களுக்காக சில இளைஞர்கள் செய்யும் செயல் அவர்களுக்கே ஆபத்தில் முடிந்துவிடுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம்தான் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
ரீல்ஸ் செலிபிரிட்டி..
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த வாலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் பாலா (22). பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வரும் ரஞ்சித் பாலாவுக்கு, ரீல்ஸ் வீடியோ செய்வதிலும், இன்ஸ்டாகிராமில் வீடியோ போடுவதிலும் அளவு கடந்த ஆர்வம் இருந்துள்ளது. சினிமா நடிகர்களின் டயலாக்குகளுக்கு வாயசைத்தும், கெத்து என்ற பெயரில் ஏதாவது கோமாளித்தனங்களை செய்தும் அவர் வீடியோ போட்டு வந்துள்ளார்.
'பட்டாஸ்' பாய்..
இவரது வீடியோக்களுக்கு சமீபகாலமாக லைக்ஸ் வருவது அதிகரித்துள்ளது. அவ்வளவுதான். "இனி சின்ராசை கையில் பிடிக்க முடியாது" என்பது போல ரெக்கை கட்டி பறந்துள்ளார் ரஞ்சித் பாலா. ஒருகட்டத்தில், தன்னையும் ஒரு செலிபிரிட்டியாக நினைத்துக்கொண்ட அவர், இன்னும் லைக்ஸ்களை அள்ளி வேற லெவலில் வலம் வர வேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களாக விதவிதமான வீடியோக்களை போட்டு வந்தார். அந்த வகையில், தீபாவளிக்கு வாங்கி மிஞ்சிப் போன பட்டாசுகளை தினுசு தினுசாக வெடித்து சில நாட்களாக அவர் வீடியோ செய்து வந்தார்.
பிளாஸ்திரி பாய்..
இந்த வீடியோவுக்கும் ரெஸ்பான்ஸ் அதிகரிக்கவே, கடந்த சில தினங்களுக்கு முன்பு விபரீதமான முடிவுக்கு வந்தார் ரஞ்சித் பாலா. அதன்படி, தனது வாயில் பட்டாசை கடித்துக் கொண்டு அதை பற்ற வைத்தார். இதில் பட்டாசு வெடித்து சிதறுவதுற்கும், அவரது வாய் வெந்து போவதற்கும் சரியாக இருந்துள்ளார். வலி தாங்க முடியாமல் தரையில் உருண்டார். இவை அனைத்தும் ரீல்ஸ் வீடியோவில் பதிவானது. இதையடுத்து, சிறிது நாட்களாகவே ரீல்ஸ் பக்கமே வராத ரஞ்சித், நேற்று தனது முகத்தை காண்பித்தார். அதில், வாயில் டேஞ்சர் குறியுடன் பிளாஸ்திரி ஒட்டி பரிதாபமாக காட்சித் தருகிறார் ரஞ்சித். லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு ஆபத்தை உணராமல் செயல்படும் இளைஞர்களுக்கு ரஞ்சித்தின் நிலைமை நல்ல பாடம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.