மாற்று சமூக தலைவரின் பேனர் கிழிப்பு.. விசிக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. அதிர்ந்த தூத்துக்குடி
தூத்துக்குடி: மாற்று சமூகத் தலைவரின் பேனர் கிழிக்கப்பட்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவர் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.
தென் மாவட்டங்களில் சமீபகாலமாக ஜாதிய ரீதியிலான மோதல்களும், படுகொலைகளும் அதிகரித்து வரும் நிலையில், இந்த பயங்கர சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலை சம்பவத்தால் தூத்துக்குடியில் சில பகுதிகளில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பற்றி எரியும் ஜாதி "தீ"
திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் 1990-களின் பிற்பகுதியில் ஜாதி ரீதியிலான வன்மங்களும், மோதல்களும் அதிகரித்தன. இதன் ஒருபகுதியாக, ஜாதி தலைவர்களாக அடையாளப்படுத்தப்பட்டவர்களின் சிலைகள் தொடர்ச்சியாக சேதப்படுத்தப்பட்டன. இது, ஜாதி சண்டையாக மாறி பல கொலை சம்பவங்கள் நிகழ்வதற்கு காரணமாக மாறியது. இதையடுத்து, ஜாதி தலைவர்களின் சிலைகள் இரும்புக் கூண்டுகளில் அடைக்கப்பட்டன. இந்த நடவடிக்கையின் காரணமாக தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டது. எனினும், ஜாதி தலைவர்களின் போஸ்டர்களால் இன்று வரை தென் மாவட்டங்களில் பிரச்சினை ஏற்பட்டுதான் வருகிறது. அப்படியொரு சம்பவம்தான் தற்போது தூத்துக்குடியில் நடந்துள்ளது.
விசிக பிரமுகர்..
தூத்துக்குடி மாவட்டம் மூன்று சென்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (47). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர், அங்குள்ள கறிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மகன் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, அந்தப் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு எதிரே மாற்று சமூகத் தலைவர் ஒருவரின் டிஜிட்டல் பேனரை முகேஷ் (18) என்ற இளைஞரும், அவரது நண்பர்களும் சில தினங்களுக்கு முன்பு வைத்துள்ளனர்.
பேனர் கிழிப்பு - தகராறு..
இதனால் அந்தப் பகுதியில் இரு வேறு சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்த சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மாரிமுத்துவின் மகன் கிழித்ததாக தெரிகிறது. இதனால் மாரிமுத்து மற்றும் முகேஷின் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, தென்பாகம் போலீஸார் இருதரப்பையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இருந்தபோதிலும், அவர்களுக்கு இடையே பகை உணர்வு கொழுந்துவிட்டு எரிந்து வந்துள்ளது.
ஓட ஓட விரட்டி..
இந்நிலையில், நேற்று பிற்பகல் முகேஷ் தலைமையிலான கும்பல் ஒன்று, மாரிமுத்துவின் வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவரது மகனையும் சரமாரியாக வெட்டியது. இதில் அவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வெளியே ஓடியுள்ளனர். ஆனால், அவர்களை விடாமல் விரட்டிச் சென்ற கும்பல், அவர்களை பயங்கரமாக தாக்கினர். இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மாரிமுத்துவின் மகனை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சாதாரண பேனரை கிழித்ததால் ஏற்பட்ட தகராறு, படுகொலை வரை சென்றது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.