3 ஆண்டுகள் முடிந்தன.. ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகப் பணிகள் தொடங்கவில்லை.. கேள்வி கேட்கும் கனிமொழி!
தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படாதது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ்நாடு அரசு தரப்பில் நிலம் பெற்று கொடுக்கப்பட்டும், மத்திய அரசு இதுவரை எந்த பணிகளையும் தொடங்கவில்லை என்று கனிமொழி விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் இந்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது. இதன் அங்கமாக 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மின்மிகை நகராக மாறிய ஆர்.கே.நகர் தொகுதி- ஜெயலலிதா செய்யாததைச் செய்து தந்த ஸ்டாலின்
ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம்
இதனிடையே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் 3 ஆண்டுகள் வரை தொடங்கப்படாமல் இருக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பாகுளம் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
தூத்துக்குடியில் கனிமொழி
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடம்பாகுளத்தின் கரை மற்றும் பாசன கால்வாய்களை பலப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சுமார் ரூ.34 கோடி மதிப்பிலான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளை தொடங்கி வைப்பதற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தந்தார்.
3 ஆண்டுகள்
இந்த பணியை கொடி அசைத்து தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்து கனிமொழி கூறுகையில், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை.
கேள்வி எழுப்புவேன்
மத்திய அரசு அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடம்பெற்று தந்தால் பணிகளை விரைவில் தொடங்குவோம் என்று அறிவித்தனர். தமிழ்நாடு அரசின் முயற்சியாலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் முயற்சியாலும் ஆதிச்சநல்லூரில் சங்கர் கணேஷ் என்பவர் தனது இடத்தினை வழங்கியுள்ளார். ஆனால் தற்போது வரை இந்த பணிகள் தொடங்கவில்லை. இதுகுறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்புவேன். இதுதொடர்பாக அமைச்சரையும் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.