காட்பாடி அருகே மேம்பாலத்தில் விரிசல்...இன்று 23 ரயில்கள் ரத்து - பயணிகள் சிரமம்
காட்பாடி அருகே ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வேலூர்: காட்பாடி அருகே திருவலத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்கள் ரத்தானதால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட வெளியூர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக பொன்னையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து முகுந்தராயபுரம் -திருவலம் ரயில் நிலையங்களுக்கு இடையே பொன்னையாற்றில் ரயில்வே பாலம் அமைந்துள்ளது. இது 1857 ஆண்டு கருங்கற்களால் கட்டப்பட்டது பாலத்தில் 55 கண்கள் உள்ளன .

சென்னை காட்பாடி- மார்க்கமாக ரயில்கள் இந்த பாலத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பாலத்தில் 38 வது கண்ணின் கீழ் விரிசல் ஏற்பட்டுள்ளது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள் பொன்னை ஆற்று ரயில்வே பாலத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
பாலம் விரிசல் ஏற்பட்டதால் ஆற்று பாலத்தில் ரயில்களை இயங்க தென்னக ரயில்வே தடைவிதித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை கோட்ட ஒருங்கிணைப்பு பொறியாளர் ராம் பிரசாத் ராவ் தலைமையிலான பொறியாளர் மற்றும் ஊழியர்கள் கொண்ட 60க்கும் மேற்பட்ட குழுவினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
சாக்கு பைகளில் மணல் மட்டும் ஜல்லிகளை நிரப்பி பாலத்தின் கீழ் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மூட்டைகளை அடுக்கி மட்டப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். இன்று காலையில் சென்னையிலிருந்து பொறியாளர் குழுவினர் வந்து அடியில் இரும்பு தடுப்புகளை அமைத்து பாலத்தை ஸ்திரப்படுத்தும் பணிகளில் மேற்கொண்டுள்ளனர்.
பராமரிப்பு பணி காரணமாக நேற்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய ஜோலார்பேட்டை செல்லும் விரைவு ரயில், சென்னை கடற்கரையிலிருந்து செல்ல வேண்டிய வேலூர் கண்டொன்மெட் செல்லும் மின்சார ரயில் மற்றும் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு ஜோலார்பேட்டை வரை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. முன் அறிவிப்பின்றி திடீரென ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பணி முடித்து வீடு திரும்பும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்கள்.
பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்றும் ஜோலார்பேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு,கோவை,ரேணிகுண்டா, அரக்கோணம் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்கள் ரத்தானதால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியூர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.எனினும்,ஏற்கனவே புறப்பட்டு சென்ற ரயில்கள் மற்றொரு வழித்தடத்தில் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
பொன்னையாற்றில் ஆங்கிலேயர்கால ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மங்களூரு-சென்னை, ஆலப்புழா-சென்னை, ரேணிகுண்டா-மைசூரு உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான முன்பதிவுக்கட்டணம் திரும்ப வழங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு செல்ல இருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications