புதைந்த அடி பம்ப்.. ஷாக்கான மக்கள்.. அதிரடி ஆக்ஷன்.. ‘அதிமுகவே காரணம்’ - மேயர் விளக்கம்!
வேலூர் : வேலூர் மாநகராட்சிப் பகுதியில், கடந்த பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்துவந்த 300 அடி போர்வெல் மற்றும் அடி பம்ப் புதையும் வகையில் அதன் மீதே கால்வாய் தடுப்பு அமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிக்காக தேர்வு செய்யப்பட்ட நிலையில், பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடி குழாய் புதையும்படி அதன் மீதே கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா பரிந்துரையின்படி ஒப்பந்ததாரர் குட்டி சரவணன் என்பவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளார்.
இதில் கவனக் குறைவாகச் செயல்பட்ட அந்த பகுதி துணை பொறியாளர் செல்வராஜிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதைந்த அடி குழாய்
ஸ்மார் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வரும் வேலூர் மாநகராட்சியில் 2வது மண்டலத்திற்குட்பட்ட சத்துவாச்சாரி வீரராகவபுரத்தில் 19வது வார்டில் தெருவோரம் இருந்த போர்வெல் மற்றும் அடி குழாய்க்கும் சேர்த்து கழிவுநீர் கால்வாய் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்துவந்த அடி குழாய் புதையும்படி, கால்வாய் தடுப்புச் சுவர் அமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கழற்றிய அதிகாரிகள்
இதனையடுத்து உடனடியாக அதனை சீரமைக்க வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டதை அடுத்து ஒரு பொறியாளர் அடங்கிய மாநகராட்சி குழு சம்பவ இடத்திற்க்கு சென்று கழிவுநீர் கால்வாயின் தடுப்பு சுவரை உடைத்து எடுத்து போர்வெல்லை மீட்டனர். பின்னர் போல்வெல்லின் மேல்பாகத்தை எடுத்துச் சென்றனர். தற்காலிகமாக போர்வெல்லின் குழாய் மூடப்பட்டுள்ளது. இதன் உயரத்தை உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஆய்வு செய்து உயரத்தை உயர்த்தி பணிகள் நடைபெற உள்ளது.

ஒப்பந்தம் ரத்து
இதுதொடர்பாகப் பேசியுள்ள வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, "ஏற்கனவே மாநகராட்சியில் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதை கருத்தில் கொண்டு இதுபோன்று செயல்படக் கூடாது என ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற்ண்டு வரும் அனைத்து ஒப்பந்ததாரர்களையும் ஏற்கனவே அழைத்து கூட்டம் போட்டு ஆலோசனை வழங்கிய பிறகும் போர்வெல்லோடு கழிவு நீர் கால்வாய் அமைத்த அந்த பணியின் ஒப்பந்ததாரர் குட்டி சரவணன் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில்
நிலுவையில் உள்ள வேறு எந்த பணிகளையும் அவர் செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளேன். வேலூர் மாநகராட்சிக்கும் அரசுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார். மேலும் இப்போது நடைபெற்று வரும் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் விடப்பட்ட ஒப்பந்தம் என்றும், தகுதியில்லாத நபர்களுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால் இது போன்ற குழப்பங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

வண்டியோடு சேர்த்து
சில வாரங்களுக்கு முன்பு வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் சிமென்ட் சாலை போடப்பட்டிருந்தது. அந்த தெருவில் வசிக்கும் ஒருவர் இருசக்கர வாகனத்தை வழக்கம் போல் தங்களது கடைமுன்பு நிறுத்திவிட்டு சென்ற நிலையில், தெருவோரம் நிற்க்க வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் சேர்த்து சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போனார். சிமெண்ட் கலவை இறுகிவிட்டதால் வண்டியை எடுக்க முடியாமல், பின்னர் சாலையை உடைத்தெடுத்து வண்டியை மீட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications