வேலூரில் பரிதாபம்.. விபத்துக்குள்ளான பறக்கும்படை கார்.. பெண் போலீஸ் பலி.. லாரி ஓட்டுநர் ஓட்டம்!
வேலூர்: நேற்று இரவு வேலூர் அருகே தேர்தல் பணி மேற்கொள்ள சென்ற பறக்கும்படையினரின் கார் விபத்துக்குள்ளானது. கார் மீது லாரி மோதியதில் பெண் போலீஸ் அதிகாரி மாலதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது.காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடக்கும் உள்ளது. தேர்தலை முன்னிட்டு 1,05,372 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று தேர்தல் பணிகளை செய்வதற்காக வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி பறக்கும்படையினர் காரில் சென்றனர்.
விபத்து
குடியாத்தம் அருகே பறக்கும்படையினர் கார் சென்ற போது எதிரே வந்த லாரி அந்த காரில் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் கார், பாதி தூரம் பறந்து சென்று பின் மொத்தமாக குப்புற கவிழ்ந்தது . இந்த கார் மிகப்பெரிய சத்தத்துடன் விபத்துக்கு உள்ளது. இதையடுத்து அருகில் கடைகள், வீடுகளில் இருந்த மக்கள் வேகமாக வந்து, கவிழுந்து கிடந்த காரில் இருந்தவர்களை மீட்டனர்.
பெண் அதிகாரி
இதில் முன்பக்கம் அமர்ந்து இருந்த பெண் போலீஸ் அதிகாரி மாலதி சம்பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு 45 வயதுதான் ஆகிறது. ஒளிப்பதிவாளர் பிரகாஷம் மற்றும் மத்திய படை காவலர் மனோஜ் ஆகியோர் கடுமையாக காயம் அடைந்தனர்.
சிகிச்சை
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் தற்போது வேலூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .
காரணம்
இந்த விபத்துக்கு லாரி ஓட்டுநர் கண்மூடித்தனமாக வேகமாக லாரியை ஒட்டி வந்ததுதான் காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தை நடந்ததும், அங்கு மக்கள் கூடியதால், லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.