லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.2.27 கோடி ரூபாய் லஞ்சப்பணத்துடன் சிக்கிய பெண் அதிகாரி: கைது- சிறையிலடைப்பு
வேலுார் பொதுப்பணித்துறை பெண் செயற்பொறியாளரின் ஓசூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 3 ஆம் தேதி சோதனை நடத்தினர். இதில் 2.28 கோடி ரொக்கம் தங்கம், வெள்ளி நகைகள், பினாமி பெயரில் இருந்த ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று அவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்துள்ளனர்.

உயர் பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி
வேலுார் கோட்ட பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்வி பிரிவு செயற்பொறியாளராக ஷோபனா(58), என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கலை, பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரிகளின் கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்குவது, அதற்கான பில் தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
செயற்பொறியாளர் ஷோபனா அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்றது. இதைத் தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. (பொறுப்பு) கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அதில் புகார்கள் உறுதியானது.

நாள் குறித்து ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை
அதன்படி ஒருநாள் அவரை சுற்றி வளைக்க திட்டமிட்டு சரியான நேரத்திற்கு காத்திருந்து, கடந்த நவ 3 ஆம் தேதி வேலூர் ஜெயில் அருகே அணைக்கட்டு சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே அவரது காரை மறித்து அதிரடியாக சோதனையிட்டனர்.

ரூ.2.27 கோடி சிக்கியது
காரில் ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது. அதற்கான ஆவணம் இல்லாததால் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தியபோது அறையில் மேலும் ரூ.20 லட்சம் கைப்பற்றப்பட்டது. அங்கிருந்த ரூ.3.92 லட்சத்திற்கான காசோலைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஷோபனாவின் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்ற லஞ்சஒழிப்பு போலீசார் அங்கு சோதனை நடத்தியபோது அதிர்ந்துப்போயினர். 2000, 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மொத்தத்தையும் எண்ணி அடுக்கியபோது அது ரூ.2.27 கோடி என தெரியவந்தது.

கட்டுக்கட்டாக பணம், மலைத்துப்போன அதிகாரிகள்
அவரிடமிருந்து மொத்தமாக ரூ.2 கோடியே 27 லட்சத்து 75 ஆயிரத்து 300 ரொக்கம், 38 சவரன் தங்க நகைகள், 3.92 ல்டசம் மதிப்புள்ள காசோலை, 1.320 கிலோ வெள்ளி, 27.98 லட்சம் மதிப்புள்ள வங்கி வைப்புச் சான்றிதழ், மேலும் முக்கிய ஆவணங்கள் கோப்புகளும் சிக்கின. இதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யவும், அவரது வங்கி லாக்கர்களை சோதனையிடவும் முடிவு செய்திருந்தனர்.

கைது சிறையிலடைப்பு
ஷோபனாவிடம் இருந்து மொத்தம் 2 கோடியே 27 லட்சத்து 75 ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வேலுார் மாவட்ட நன்னடத்தை அலுவலர் முருகன் புகார்படி ஷோபனா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 27 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த போலீஸார் இன்று ஷோபனாவை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications