எனக்குனே வருவீங்களாய்யா? அன்று 'பவர்', அடுத்த நாள் 'மணி'.. துரைமுருகன் பங்கேற்ற விழாவில் கலகலப்பு!
வேலூர் : சமீபத்தில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற விழாவில் 'பவர் கட்' ஆகி மின் வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாளே துரைமுருகன் பங்கேற்ற மற்றொரு விழாவில் வேறொரு ரூபத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் சைக்கிள் வழங்கும் விழாவில் பங்கேற்று அமைச்சர் துரைமுருகன் பேசிக் கொண்டிருந்தபோது, அருகே இருக்கும் கோயிலில் இருந்து மணி ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது.
இதனால், கடுப்பான அமைச்சர் துரைமுருகன், எனக்குனே வருவீங்களாய்யா? எங்க போனாலும் டிஸ்டர்பன்ஸ் என கிண்டலாகப் பேசியுள்ளார். மீண்டும் தான் பேசும்போது இடையூறு ஏற்பட்டதால் அமைச்சர் டென்ஷன் ஆவாரோ என அதிகாரிகள் நகம் கடித்த நிலையில், சுமூகமாக அந்தப் பிரச்சனை முடிந்துள்ளது.

துரைமுருகன் மீட்டிங்கில் சம்பவம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது மின்சாரம் திடீரென தடைபட்டதால் மைக் வேலை செய்யவில்லை. பின்னர் மின் வாரிய அதிகாரிகளை மாவட்ட ஆட்சியரும், எம்.எல்.ஏவும் தொடர்பு கொண்டு பேசினர்.

உடனடி டிரான்ஸ்ஃபர்
10 நிமிடங்களுக்கும் மேல் மின்சாரம் வராத நிலையில், அமைச்சர் துரைமுருகன் அப்செட்டாகி, மேடையில் பேசாமலயே கிளம்பினார். அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற விழாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரு மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆர்டர் போடவே, மேலும் 2 மின் வாரிய உதவி பொறியாளர்களும் டிரான்ஃஸ்பர் செய்யப்பட்டனர்.

டிஸ்டர்பன்ஸ்
இதற்கிடையே, இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே காட்பாடி தொகுதிக்குட்பட்ட பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். பிறகு, அவர் பேசிக்கொண்டிருந்தபோது, இடையிடையே கோவில் மணி ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. இதனால், அவரது பேச்சுக்கு இடையூறு ஏற்பட்டது.

எனக்குனே நடக்குமா?
அருகே இருந்த கோவிலில் இருந்து தொடர்ந்து மணி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால், பேசுவது டிஸ்டர்ப் ஆனதால் கடுப்பான அமைச்சர் துரைமுருகன், எனக்குனே வருவீங்களாய்யா? நான் பேசுற இடத்தில் எல்லாம் இப்படியே நடக்குது என கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளார். நிலைமையை உணர்ந்து மேடையில் இருந்தவர்கள் சிரித்துச் சமாளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications