வெறும் 8 மணி நேரத்தில் 67 செமீ. மழை.. வேலூர் மாவட்டத்தை புரட்டி போட்ட நிவர்.. வெள்ள அபாய எச்சரிக்கை!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரத்தில் 67 செ.மீ. மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஆறுகள் மற்றும் குளங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. இதன் காரணமாக வேலூரில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்தது.
நேற்று முன்தினம். இரவு 10.30 மணி முதல் மழையின் வேகம் அதிகரித்தது. விடிய, விடிய மழை தொடர்ந்து வெளுத்தது. வேலூர், அம்முண்டி சர்க்கரை ஆலை, காட்பாடி பகுதியில் அதிகளவு மழை பெய்திருந்தது. நேற்று காலை 9 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 38 செ.மீ. மழை பெய்திருந்தது.
67செமீ மழை
புயல் கரையை கடந்து வேலூர் மாவட்டம் வழியாக தெற்கு ஆந்திராவிற்குள் பயணிக்க தொடங்கிய போது மிதமான காற்றுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூரில் பல இடங்களில் இடைவிடாது மழை கொட்டியது. சில சமயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரத்தில் 67 செ.மீ. மழையளவு பதிவானது. அதிகபட்சமாக பொன்னையில் 16 செ.மீ. மழை பதிவானது.
மழை வெள்ளம்
பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, காட்பாடிசாலை, ஆற்காடுசாலை, ஆரணிசாலை, பெங்களூரு சாலை மற்றும் சத்துவாச்சாரி பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதந்தன.
வேலூர் கன்சால்பேட்டை காந்திநகர், இந்திராநகர், சம்பத்நகர், காட்பாடியில் சில பகுதிகள் என்று 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் பெருக்கெடுத்தது காட்பாடியை அடுத்த மேல்பாடி அருகே உள்ள மாதாண்டகுப்பம் ஏரி கரை நேற்று மதியம் திடீரென உடைந்து, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி ஊருக்குள் புகுந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். காட்பாடி பகுதியில் மட்டும் 25 இடங்களில் மரங்கள் விழுந்தன. நான்கு இடங்களில் மின்கம்பங்கள் விழுந்து சேதமாகின. கே.வி.குப்பத்தை அடுத்த அரும்பாக்கம், வேப்பங்கநேரி, காளாம்பட்டு, மேல்மாயில் ஆகிய பகுதிகளில் 5 மரங்கள் வேரோடு சாய்ந்தன.
உத்திரகாவேரி
ஜவ்வாதுமலைத் தொடரில் இருந்து உருவாகி மேல்அரசம்பட்டு வழியாக ஓடும் உத்திரகாவேரி (அகரம்) ஆற்றில் கடந்த 3 ஆண்டுகளாக வெள்ளம் ஏற்படவில்லை.. இந்நிலையில் நிவர் புயல் மழை காரணமாக நேற்று இரவில் இருந்து உத்திரகாவேரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மரங்கள் விழுந்தன
அணைக்கட்டு அருகே இலவம்பாடியில் ஒரு புளியமரமும், குடிசை கிராமத்தில் சாலையோரம் இருந்த இரு புளிய மரங்களும் வேரோடு சாய்ந்தன. மரங்கள் விழுந்தபோது, அருகில் இருந்த மின் கம்பங்களும் சரிந்தன. அப்போது அந்த வழியாக காரில் பயணம் செய்த 4 பேர் உயிர் தப்பினர். எனினும் மரம விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இலவம்பாடி மற்றும் ஊசூர் வழியாக செல்லும் வாகனங்கள் 4 மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டன.
பாலாறு
வேலூர் மாவட்டத்தில் நாகநதியில் 3 ஆயிரத்து 460 கனஅடியும், கவுண்டன்ய நதியில் 3 ஆயிரத்து 320 கனஅடியும், அகரம் ஆற்றில் 4 ஆயிரம் கனஅடியும், பொன்னை ஆற்றில் 7 ஆயிரத்து 40 அடியும், பாலாற்றில் 17 ஆயிரம் கனஅடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
பாதிப்பில்லை
வேலூர் மாவட்டத்தில் கனமழையால் பெரும் பொருட்சேதமோ, எவ்வித உயிர்சேதமோ ஏற்படவில்லை என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார். எனினும் மழையால் வேலூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பொன்னை-162.4, வேலூர்-131.7, அம்முண்டி சர்க்கரை ஆலை-129.2, காட்பாடி-109.2, குடியாத்தம்-76.4, மேல்ஆலத்தூர்-60 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. வேலூர்மாவட்டம் முழுவதும் 8 மணி நேரத்தில் 67 செ.மீ. மழை பெய்துள்ளது.