நள்ளிரவில் வந்த வலிப்பு.. பேய் பிடித்துவிட்டதாக கூறி சிறுவனை அடித்தே கொன்ற தாய்
வேலூர்: பேய் ஓட்டுவதாக கூறி அழைத்துச் செல்லப்பட்ட உடல் நலம் பாதித்த சிறுவனை தாய் மற்றும் 2 சித்திகள் அடித்துக் கொலை செய்த சம்பவம் வேலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் திலகவதி. இவரது மகன் சபரி(7). திலகவதியின் கணவர் கார்த்திக் கடந்த 2 வருடம் முன்பு இறந்துவிட்டார்.
திலகவதி தனது 7வயது மகனுடன் வேலூர் அடுத்த அரியூர் ஜெ.ஜெ.நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். சிறுவன் சபரிக்கு வலிப்பு நோய் இருந்து வந்திருக்கிறது. ஆனால், உறவினர்கள் சிறுவனுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி பேய் ஓட்டுபவரிடம் அழைத்து செல்லுமாறு கூறி உள்ளனர்.
வந்தவாசி பயணம்
அதை நம்பி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பேய் ஓட்டுபவரிடம் காண்பிக்க சபரியை திலகவதி தனது தங்கைகளான கவிதா(28), பாக்கியலட்சுமி(26) ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலையில் சென்றுள்ளார்.
இறங்கிவிட்ட ஆட்டோ ஓட்டுநர்
இவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே சென்றதும் அவர்களை டிரைவர், இறக்கி விட்டு சென்றுவிட்டார். நள்ளிரவானதால், பேரூராட்சி அலுவலகம் முன் தங்கியிருக்கிறார்கள்.. நேற்று அதிகாலை 3 மணியளவில் சபரிக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டுள்ளது.
அடித்துக்கொலை
உடனே சிறுவனுக்கு மீண்டும் பேய் பிடித்துவிட்டதாக நினைத்த தாய் திலகவதி உட்பட 3 பேரும் சேர்ந்து பேயை விரட்ட சபரியை அடித்துள்ளனர். இதில் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேரும் சேர்ந்து கை, கால்களையும் கழுத்தையும் அழுத்தியதாக கூறப்படுகிறது. இதில் அந்த இடத்திலேயே பரிதாபமாக சபரி இறந்துபோனான்
போலீசார் வருகை
உடனே 3 பேரும் கதறி அழுதனர். இதுபற்றி தகவலறிந்து கண்ணமங்கலம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் வலிப்பு நோயால் துடித்த சிறுவனுக்கு பேய் பிடித்ததாக நினைத்து தாய் உட்பட 3 பேரும் சேர்ந்து அடித்து கழுத்தை அமுக்கியதில் இறந்தது விசாரணையில் தெரியவந்தது.
3 பேரும் கைது
மூட நம்பிக்கையால் இப்படி ஒரு மோசமான சம்பவம் நடந்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து, திலகவதி அவரது தங்கைகளான கவிதா(28), பாக்கியலட்சுமி(26) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.