கர்நாடகாவிற்கு பாடம் புகட்ட.. ஊட்டியில் அணை கட்டி தண்ணீர் தடுக்கப்படுமா? துரைமுருகன் விளக்கம்
வேலூர்: காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததற்கு பதிலடியாக, நீலகிரி மாவட்டத்தில், தடுப்பணை கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது பற்றி தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்திருக்கிறார்.
Recommended Video
வேலூர் சத்துவாச்சாரியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" மூலம் பெறப்பட்ட மனுக்களில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழக நீர்பாசனத்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் ரட்சகன், கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், ஈஸ்வரப்பன், அமுலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் 387 பயனாளிகளுக்கு ரூ.8.94 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
மேகதாது அணை.. காவிரி நதிநீர் ஆணையத்தில்.. விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்த கர்நாடக அரசு
கர்நாடகா மதிப்பதில்லை
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்.. மேட்டூர் அணையிலிருந்து டெல்டாவிற்கு செல்லும் நீர் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் மதிக்கவில்லை, உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையும் மதிக்கவில்லை. எதையும் மதிக்கவில்லை.
கனிம வளத்துறை கொள்ளை
கனிம வளங்கள் பற்றி பல இடங்களில் மாவட்ட அதிகாரிகளுடன் பார்த்து வருகிறோம். ஆட்கள் போதவில்லை. எல்லா இடங்களில் பெரிய அளவில் கொள்ளை கனிம வளத்துறையில் நடந்துள்ளது. புதிய நீர்பாசன திட்டத்தில் மூலம் ஏற்கனவே 90 அணைகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் ஆங்காங்கே சிறு தடுப்பணைகளை அமைக்கவுள்ளோம். இதன் மூலம் மக்களின் குடிநீர் பிரச்சணை தீர்க்கபடும்.
ஊட்டியில் அணை
ஊட்டியில் கர்நாடகவுக்கு செல்லும் ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கர்நாடகாவிற்கு பதிலடியாக அமையும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அங்கு ஏற்கனவே அணை உள்ளது. இருக்கிற பிரச்சனை தீர்ந்தால் போதும். புதிதாக அணை தேவையில்லை.
லாட்டரி வராது
பாண்டியாறு, பொன்னம்பலா ஆறு பிரச்சனை என ஒவ்வொரு மாநிலத்துடனும் நதி நீர் பிரச்சினை இருக்கிறது. போன ஆட்சியில் குடிமராமத்து நடப்பதாக கூறியதோடு சரி. அதை செய்யவில்லை. எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிசாமி லாட்டரியை மீண்டும் கொண்டுவருவதாக கூறுவது இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடுவதை போல இருக்கிறது. இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.