விழுப்புரம் போலீசாரால் பாதிக்கப்பட்ட 15 பேருக்கு.. ரூ.75 லட்சம் இழப்பீடு.. மனித உரிமை ஆணையம் உத்தரவு
சென்னை: காவல் துறையினரால் மானபங்கம் செய்யப்பட்டு, அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் உள்பட 15 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கத் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த டி.மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த காசி என்பவரை, கடந்த 2011 நவம்பரில் திருக்கோவிலூர் காவல் நிலையத்தினர் அழைத்துச் சென்றனர்.
பின்னர் இரவு 8 மணிக்கு, அவரது மனைவி லட்சுமி, மாமனார் குமார், சகோதரிகள் ராதிகா, வைதீச்வரி, மைனர் சகோதரர்கள் இருவர் என மொத்தம் ஆறு பெண்கள் உள்பட 14 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், நான்கு பெண்களை தைலாபுரத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, மானபங்கம் செய்ததாகக் கூறி, திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், ஏட்டு தனசேகரன், காவலர்கள் பக்தவத்சலம், கார்த்திகேயனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி, விழுப்புரம் கூடுதல் எஸ்பி-யிடம் புகார் அளித்துள்ளார்.
இது சம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், இரவு நேரத்தில் பெண்களைக் காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது என்ற உத்தரவை மீறி, ஆறு பெண்களைக் காவல் நிலையத்தில் வைத்ததுடன், ஆண் உறுப்பினர்களையும் தாக்கியது நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட 15 பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க உத்தரவிட்டார்.
மேலும், சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளுக்கு எதிரான துறை ரீதியிலான நடவடிக்கையில் மூன்று மாதங்களில் உத்தரவு பிறப்பிக்கத் தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்ட ஆணையம், காவல் துறையினருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுக் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.