பார்த்தீங்களா.. “கருநாக்கு” நான் சொன்னா அப்படியே பலிக்கும்.. நாக்கை நீட்டி காட்டிய அமைச்சர் மஸ்தான்!
விழுப்புரம் : எனக்கு கருநாக்கு.. நான் சொன்னா அப்படியே பலிக்கும் என திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாக்கை நீட்டி காட்டியிருக்கிறார்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது, மு.க.ஸ்டாலின் தான் நிரந்தர முதல்வர் எனத் தெரிவித்தார்.
மேலும், ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று சொன்னார்கள், ஸ்டாலின் முதல்வராகப் போகிறார் என்று நான் அன்றே உறுதியாகச் சொன்னேன்.. எனக்கு கருநாக்கு, நான் சொன்னால் பலித்துவிடும் எனத் தெரிவித்தார்.
அதோடு நிற்காமல், தனது நாக்கை நீட்டிக் காட்டி, பாருங்கள் கருநாக்கு என அமைச்சர் மஸ்தான் கூறியதைப் பார்த்து கட்சி நிர்வாகிகள் இடையே சிரிப்பலை எழுந்தது.

அமைச்சர் செஞ்சி மஸ்தான்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நகர செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசும்போது திண்டிவனத்தில் கவுன்சிலர் தேர்தலில் சில நிர்ப்பந்தத்தின் காரணமாக கூட்டணி கட்சிக்கு சீட்டுகள் தந்தோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் நிரந்தர முதல்வர். அவர் இறுதி மூச்சு வரைக்கும் முதலமைச்சராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

என் நாக்கு கருநாக்கு
மேலும், நாம் ஐந்தாம் தலைமுறை உருவாக்கி விட்டோம். ஸ்டாலின் எந்தக் காலமும் முதல்வராக முடியாது என்று சொன்னார்கள். எதிர்க்கட்சிகள், நாங்கள் ஜோசியம் பார்த்துவிட்டோம் என்றார்கள். ஆனால் நான் அன்றே சொன்னேன். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்துவிட்டார் என்று. முதலமைச்சராக ஸ்டாலின் வருவார் என்று. நான் சொன்னால் பலிக்கும். என் நாக்கு கருநாக்கு. நானும் ஜோசியக்காரன்தான்" என்று பேசினார். மேலும், தனது நாக்கை நீட்டிக் காட்டினார்.

செல்லப்பிள்ளை
மேலும் பேசிய அமைச்சர் மஸ்தான், "திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் பொறுப்பு எடுத்துக் கொண்டார். அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்பது அனைவருடைய நம்பிக்கை. கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரோடு நெருக்கமாக இருந்து நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தினுடைய செல்லப்பிள்ளை அவர். எனவே அவர் சிறப்பான முறையில் பணியாற்றி தமிழக முதல்வர் ஸ்டாலினின் வழியில் பயணத்தை மேற்கொள்வார்.

ஐந்தாம் தலைமுறை
எதிர்கால தமிழர்களுடைய முகவரியாகத் திகழக்கூடியவர் உதயநிதி ஸ்டாலின். சிறந்த முறையில் திராவிட மாடலுக்கு ஐந்தாம் தலைமுறையாகப் பொறுப்பேற்று இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இனி நூறு ஆண்டுகாலம் திராவிடத்தினுடைய பாரம்பரியத்தைக் கட்டிக் காத்து, இன்னும் நூறாண்டு காலத்திற்குக் கழகத்தை எடுத்துச் செல்ல உதயநிதி கழகப் பணி ஆற்றுவார்." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications