டெல்லியில் போராடுபவர்கள் இடைத்தரகர்களா?.. குஷ்புவின் தவறான புரிதல்.. கமல் கடும் விமர்சனம்
செஞ்சி: டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, இடைத்தரகர்கள் என குஷ்பு கூறியது தவறான புரிதல் ஆகும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மதுரையில் பாஜக சார்பில் விவசாயிகளின் நண்பர் மோடி என்ற விவசாயிகள் சந்திப்பு கூட்டங்கள் நேற்றைய தினம் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் நடிகையும் அண்மையில் பாஜகவில் இணைந்தவருமான குஷ்பு கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் குஷ்பு பேசுகையில், மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை பாதுகாக்கும். விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தும். ஒன்றரை லட்சம் விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கருத்துக் கேட்ட பிறகுதான் மத்திய அரசு அந்த மசோதாவை கொண்டு வந்தது.

ஹரியானா
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் எதிர்க்கட்சிகள், இடைத்தரகர்களின் தூண்டுதல்களின் பேரில்தான் விவசாயிகள் போராடி வருகிறார்கள். தற்போது விவசாயிகளைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். வேளாண் சட்டங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்தால் இடைத்தரகர்களால் சம்பாதிக்க முடியாது.

இடைத்தரகர்கள்
விவசாயிகள் நேரடியாகப் பலனடைவர். இதனால் இடைத்தரகர்கள் போராட்டத்தை தூண்டி வருகிறார்கள் என குஷ்பு பேசியிருந்தார். இந்த நிலையில் செஞ்சியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், குஷ்புவின் கருத்துக்கு எதிர்கருத்தை முன் வைத்துள்ளார்.

குஷ்பு
கமலிடம் குஷ்பு குறித்த கேள்விகளை கேட்ட போது அவர் கூறுகையில், டெல்லியில் இடைத்தரகர்கள்தான் போராடுகிறார்கள் விவசாயிகள் போராடவில்லை என குஷ்பு கூறியது தவறான புரிதல். அங்கு இருப்பவர்கள் அனைவருமே விவசாய உபகரணங்களுடன் போராடி வருகிறார்கள். அவர்கள் இடைத்தரகர்கள் அல்ல.

மண்ணின்
சேற்றில் கால் பதித்தவர்கள். இங்கிருந்து போய் அவர்களுக்காக ஆதரவு குரல் கொடுப்பவர்களும் விவசாயிகள், மண்ணின் மைந்தர்கள் என கமல் பேசினார். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற கமல் அறிவித்த திட்டத்திற்கு நடிகை குஷ்பு பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications