நிலத்தை அபகரித்ததாக திமுக எம்.பி மீது புகார்.. கலெக்டர் முன்பு காவலாளி தீக்குளிக்க முயற்சி..பரபரப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் சாஸ்தா கோவில் நீர்தேக்கம் அணை பருவ மழை காரணமாக முழு கொள்ளவு எட்டியது. இந்த அணை விவசாய பயன்பாட்டிற்க்காக இன்று திறந்து வைக்கப்பட்டது.
இராஜபாளையம் தி.மு.க எம்.பி தங்கபாண்டியன், மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு அணையை திறந்து வைத்தனர். பின்னர் அனைவரும் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது தேவதானம் சாஸ்தா கோவில் நீர்தேக்கம் அணை காவலாளியாக பணிபுரிந்த ஊழியர் தேவதானம் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வாகனம் முன்பு தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கணேஷ் குமாரை தடுத்து நிறுத்தினார்கள்.
இது தொடர்பாக கணேஷ் குமாரிடம் போலீசார் விசாரித்தபோது பரபரப்பு தகவல் வெளியானது.
கணேஷ்குமார் அதே பகுதியில் தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் விவசாய நிலத்தில் குடும்பத்தினருடன் விவசாயம் செய்து வந்துள்ளார். இவரது விவசாய நிலத்தின் ஒட்டிய பகுதியாக தென்காசி தொகுதி தி.மு.க எம்.பி தனுஷ் எம்.குமார் நிலம் உள்ளது.
திமுக எம்.பி தனது நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், இதனால் விவசாய நிலத்திற்க்கு செல்லும் பாதையில்லை எனவும், ஒரு கட்டத்தில் தனது ரூ.50 லட்சம் மதிப்பிலான 2.5 ஏக்கர் விவசாய நில சொத்தினை தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடு என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கணேஷ் குமார் கூறினார்.
மேலும் தான் பார்த்து வந்த நீர்தேக்க அணை காவலாளி பணியை திமுக எம்.பி தனது அதிகாரத்திணை பயனப்டுத்தி சஸ்பெண்ட் செய்ய வைத்துள்ளார் என்றும் கணேஷ் குமார் குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற கணேஷ் குமாரை மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி அழைத்து பேசினார்.
சென்னைவாசிகள் கவனத்திற்கு.. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்காம்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!
அப்போது விவசாய நிலத்திற்க்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் தன்னிடம் உள்ளதாகவும் நிலத்தினை அளக்க சர்வேயரிடம் இரண்டு முறை மனு கொடுத்தும் வரவில்லை என்றும் கணேஷ் குமார் அவரிடம் தெரிவித்தார். இது பற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி இது போன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை கூறி சென்றார்.