ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடக்குமா? இடைத்தேர்தல் வருமா.. தேர்தல் அதிகாரி பதில்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாதவராவ் வென்றால், மீண்டும் இடைத்தேர்தல் நடக்கும். ஆனால் தோற்றால் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.
Recommended Video
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மாதவராவ் (63) போட்டியிட்டார். வேட்பு மனு தாக்கல் செய்தது முதலே கொரோனா தொற்று காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். தேர்தல் பிரசாரத்தின் போது மாதவராவின் மகள்தான் முன்னின்று பிரசாரம் செய்தார்.
நுரையீரலில் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாதவராவின் உடல்நிலை நேற்று கவலைக்கிடமானது.ஐசியுவில் வெண்டிலேட்டரில் இருந்து சிகிச்சை பெற்று வந்த மாதவராவ், சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிரிழந்தார்.
தேர்தல் நடைமுறை
மாதவராவ் உயிரிழந்த காரணத்தால், ஒருவேளை அவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும். ஏனெனில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றால் அங்கு மீண்டும் தேர்தல் நடக்கும். அதேநேரம் அவர் தோல்வியடைந்தால் தேர்தல் நடைபெறாது . இதுவே தேர்தல் நடைமுறையாகும்.
அதிமுகவின் கோட்டை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை பொறுத்தவரை கடந்த 1971ம் ஆண்டு முதல் 2018 வரை நடந்த 11 தேர்தல்களில் அஇஅதிமுக ஆறுமுறை வென்றுள்ளது. திமுக இரண்டு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் ஒருமுறையும் சுயேட்சை(தாமரைக்கனி) ஒருமுறையும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வென்றுள்ளனர். கடைசியாக 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திரபிரபா வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.
காங். சார்பில் மாதவராவ் போட்டி
2021 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் மான்ராஜ் போட்டியிட்டுள்ளார்.. காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது கொரோனாவால் பலியான மாதவராவ் போட்டியிட்டார். அமமுக சார்பில் சங்கீதப்பிரியா சந்தோஷ்குமார் போட்டியிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில் குருவைய்யாவும், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும் போட்டியிட்டனர்.
தேர்தல் ஆணையர் தகவல்
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் வேட்பாளர் மறைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார். ஒருவேளை மாதவராவ் தேர்தலில் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.