தன்னை எதிர்த்த இரண்டு பேருக்கும் ஆப்பு.. 'பவர் புல்' ராஜேந்திர பாலாஜி.. பரபரப்பில் விருதுநகர்
விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் விருதுநகர் மாவட்ட அதிமுகவில் பவர்புல் தலைவர் என்பதை காட்டி உள்ளார். இவரை எதிர்த்து வந்த சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மனுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதேபோல் சிவகாசி தொகுதியில் இருந்து ராஜபாளையத்திற்கு தொகுதி மாறி போட்டியிட விரும்பிய அவர், கௌதமியிடம் இருந்து தட்டி பறித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் 2016ம் ஆண்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் எதிர்கோட்டை சுப்ரமணியன். இவர் டிடிவி தினகரனின் முகாமிற்கு சென்றதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து ராஜேந்திர பாலாஜியின் தீவிர ஆதரவாளராக இருந்த ராஜவர்மன் சாத்தூர் தொகுதிக்கு நடந்த 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
ஆனால் அதற்கு பிறகு மெல்ல மெல்ல, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், ராஜவர்மனுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ராஜேந்திர பாலாஜி மீது கடும் குற்றச்சாட்டுகளை ராஜவர்மன் கூறி வந்தார். இதனால் மோதல் அதிகரித்தது.

சாத்தூர் தொகுதி
இந்த சூழலில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட ராஜவர்மனுக்கு சீட் வழங்கப்படவில்லை. அதற்கு பதில் விருதுநகர் மாவட்ட கிழக்கு செயலாளர் ரவிச்சந்திரனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ராஜவர்மன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

சீட் மறுப்பு
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜவர்மன், மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்றி உள்ளேன். உண்மை நிலவரத்தை முதல்வர், துணை முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும். கடந்த 8 மாதங்களாக விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் இல்லாமல் இருந்தது. இப்போது 2 மாவட்டமாக பிரித்து கட்சி விட்டு கட்சி மாறியவரை அமைச்சர் அழைத்து வந்து அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சரின் கைக்கூலிக்குத்தான் பதவி என்றாகிவிட்டது. அதிமுக இயக்கத்திற்காக பாலாஜியா அல்லது பாலாஜிக்காக அதிமுகவா என்று தெரியவில்லை. அவரை எதிர்த்ததால் எனக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது" என்று வேதனை தெரிவித்தார்.

ராஜபாளையம்
ராஜவர்மனுக்கு மட்டும் ராஜேந்திர பாலாஜி செக் வைக்கவில்லை. நடிகை கௌதமிக்கும் சேர்த்தே செக் வைத்துள்ளார். எப்படியும் தனக்கு ராஜபாளையம் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அங்கேயே முகாமிட்டு கௌதமி பணியாற்றி வந்தார். ஆனால் சிவகாசி தொகுதியில் இருந்து மாறி ராஜபாளையத்தில் போட்டியிட விரும்பிய ராஜேந்திர பாலாஜி, தனக்குத்தான் ராஜபாளையம் வேண்டும் என்று கோரியிருந்தார்,.

ராஜேந்திர பாலாஜி
ஆனால் பாஜகவோ ராஜபாளையம் தங்களுக்குத்தான் வேண்டும் என்று கூறியது. ஒருகட்டத்தில் கௌதமிக்கு ஒதுக்கப்படுமோ என்ற பரபரப்பும் நிலவியது. ஆனால் அதிமுக தலைமையிடம் முட்டி மோதிய ராஜேந்திர பாலாஜி, தான் விரும்பிய ராஜபாளையத்தை கேட்டு வாங்கிவிட்டார். பாஜகவிற்கு விருதுநகர் தொகுதியை அதிமுக ஒதுக்கி உள்ளது. இதனால் கௌதமி விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவாரா என்ற பரபரப்பு நிலவுகிறது. இந்த சட்டசபை தேர்தலில் தனக்கு வேண்டிய ர் ரவிச்சந்திரனுக்கு சீட் வாங்கிய ராஜேந்திர பாலாஜி, ராஜவர்மன், கௌதமி ஆகிய இருவருக்கும் தான் தான் விருதுநகர் மாவட்டத்தில் பவர் புல் என்று காட்டி உள்ளார் என்று அதிமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications